ஸ்ரீஸ்ரீரடி சாய் மூவிஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் ஸ்ரீ & காவ்யா தயாரிக்கும் புதிய படம் ‘அச்சம் என்பது இல்லயே’.
இந்தப் படத்தில் அருண் விஜய், ஏமி ஜாக்சன், நிமிஷா சஜயன் ஆகியோர் இணைந்து நடிக்கிறார்கள். இயக்குநர் விஜய் இந்தப் படத்தை எழுதி, இயக்கி வருகிறார்.
சமீபத்தில், லண்டனில் இந்தப் படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு நிறைவடைந்து அடுத்தக் கட்டப் படப்பிடிப்பு தற்போது சென்னையில் தொடங்கி இருக்கிறது. இதற்காக சென்னையின் பின்னி மில்ஸ் பகுதியில் 2.5 ஏக்கர் பரப்பளவில் 3.5 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமாக லண்டன் சிறையின் பிரதியை செட் அமைத்துள்ளனர்.
ராமலிங்க மேஸ்திரி உதவியுடன் கலை இயக்குநர் சரவணன் நூற்றுக்கணக்கான வேலைப்பாடுகள் மற்றும் ஆட்களுடன் லண்டன் சிறையை மறு உருவாக்கம் செய்திருக்கிறார்.
இந்த ஷெட்யூலில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெளிநாட்டைச் சேர்ந்த ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் இதில் பங்கேற்க இருக்கின்றனர். இவர்களுடன் அருண் விஜய் பங்கேற்கக் கூடிய தீவிரமான ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட இருக்கிறது.
முன்பே திட்டமிட்டபடி படத்தின் ஷெட்யூல் மிகச் சரியாக போய் கொண்டிருப்பது குறித்து தயாரிப்பாளர் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். இயக்குநர் விஜய்யும் திட்டமிட்டபடி அந்த நேரத்திற்குள்ளோ அல்லது அதற்கு முன்போ மிகச் சரியாக படப்பிடிப்பை முடித்து விடக்கூடியவர். அதைப் போலவே ‘அச்சம் என்பது இல்லயே’ படப்பிடிப்பும் திட்டமிட்ட காலத்திற்கு முன்பாகவே முடிந்து விடும் என்று படக் குழுவினர் கூறுகின்றனர்.