இயக்குநர் அபிஷேக் ஷர்மா இயக்கத்தில் அக்ஷய் குமார் நடிப்பில் கடந்த அக்டோபர் 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘ராம் சேது’. ஜாக்லீன் பெர்னான்டஸ், நுஷ்ரத் பாருச்சா, சத்ய தேவ் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்திற்கு டேனியல் ஜார்ஜ் இசையமைத்திருந்தார்.
ராமர் பாலத்தை அடிப்படை களமாக கொண்ட இப்படம் பான் இந்தியா முறையில் வெளியானது. 90 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட இப்படம் 73 கோடி மட்டுமே வசூலித்து நஷ்டத்தை சந்தித்துள்ளது.
நடிகர் அக்ஷய் குமாரின் படங்கள் அண்மைக் காலமாக படுதோல்வியை சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது. அக்ஷய் குமார் நடித்து இந்த வருடம், ‘சாம்ராட் பிருத்விராஜ்’,‘பச்சன் பாண்டே’, ’ரக்ஷா பந்தன்’, ‘ராம் சேது’ ஆகிய 4 படங்கள் திரையரங்கில் வெளியாகின. இதில் ‘கட்புட்லி’ ஓடிடியில் வெளியானது. மற்றவை அனைத்தும் தோல்வி அடைந்தன.
ஒரே நேரத்தில் பல படங்களில் கவனம் செலுத்தியதால்தான் ஒரு படமும் ஓடவில்லை என்று அவர் மீது விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் விழா ஒன்றுக்கு வந்த அக்ஷய் குமாரிடம் இதுபற்றி கேள்வி எழுப்பியதும் கோபம் அடைந்தார்.
அவர் கூறும்போது, “வருடத்துக்கு 4 படங்களில் நடிக்கிறேன். விளம்பரங்களில் நடிக்கிறேன். அது என் வேலை. நான் யாரிடமும் திருடவில்லை. எனக்கு இந்தக் கேள்வி புரியவில்லை. இதில் என்ன தவறு என்றும் புரியவில்லை. வேலை செய்ய வாய்ப்பு கிடைத்தால் யார் செய்ய மாட்டார்கள்?” என்றார்.