Friday, April 12, 2024

“நடிகர் சங்க கட்டிடம் சென்னையின் ஓர் அடையாளமாக இருக்கும்” – நடிகர் விஷால் பேச்சு..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 66-வது பொதுக் குழு கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது.

பொதுக் குழு கூட்டம் முடிந்ததும் தலைவர் நாசர், பொது செயலாளர் விஷால் மற்றும் பொருளாளர் கார்த்தி ஆகியோர் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார்கள்.

சங்கத்தின் தலைவரான நடிகர் நாசர் பேசும்போது, “தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 66-வது பொதுக் குழு கூட்டம் இன்றைக்கு மிக, மிக சிறப்பாக நடைபெற்றது. சௌகார் ஜானகி அம்மாவிற்கு மரியாதை கொடுத்த நிகழ்வு உணர்வுபூர்வமாகவும் இருந்தது. இரண்டு வருடங்கள் காத்திருந்தாலும் அதைவிட வேகமாக செயல்படுவதற்கு இந்த பொதுக் குழு எங்களுக்கு முழு உத்வேகத்தை கொடுத்துள்ளது. இன்றுடன் பேச்சைக் குறைத்து நாளை முதல் முழு மூச்சாக செயலில் இறங்குவோம்…” என்றார்.

சங்கத்தின் செயலாளரான நடிகர் விஷால் பேசும்போது, “நடிகர் சங்க கட்டிடத்தைக் கட்டி முடிப்பதற்கான செலவுக்காக நட்சத்திர இரவு விழாவை நடத்துவதா அல்லது வங்கியில் கடன் வாங்குவதா என்று முடிவெடுக்கும் அதிகாரத்தை நாங்கள் பொதுக் குழுவில் இருந்து வாங்கியிருக்கிறோம். அதன்படி செயல்படுவோம்.

இதுவரையிலும் 70 சதவீதம் கட்டிடம் முடிக்கப்பட்டுள்ளது. உள் வடிவமைப்பையும் சேர்த்து இன்னும் 40 சதவிகித வேலை உள்ளது. இதை முடிப்பதற்கு இன்னும் 30 கோடி ரூபாய் தேவைப்படுகிறது. இதற்கான நிதியை எப்படி திரட்டலாம் என்று ஆலோசனை செய்து வருகிறோம்.

இது ஒருபுறமிருந்தாலும், தனிப்பட்ட முறையிலும் நடிகர் நடிகைகளிடம் கேட்டு, அவர்களிடமும் நிதி திரட்ட உள்ளோம். நடிகர் சங்க கட்டிடம் என்பதால் நடிகர், நடிகைகளிடம் தனிப்பட்ட முறையில் கேட்பதற்கு நாங்கள் வெட்கப்படவில்லை.

அதேபோல், வங்கியிலும் கடன் வாங்க ஒப்புதல் வாங்கி விட்டோம். எல்லா வகையிலும் இத்திட்டத்திற்கு தேவையான நிதியை வசூல் செய்து எந்தளவுக்கு விரைந்து கட்டிடத்தை முடிக்க முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் விரைந்து முடிப்போம். மேலும், இன்னும் மூன்று ஆண்டுகளுக்கு இந்த அணி சொன்ன வாக்குறுதிகளை நிச்சயமாக நிறைவேற்றும்.

இன்றைய பொதுக் குழு கூட்டம் மிகச் சிறப்பாக நடந்து முடிந்தது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தாதாசாகேப் பால்கே விருது வாங்கியதற்காக வாழ்த்து தெரிவித்தோம். அதேபோல் , பத்ம்ரீ விருது பெற்ற சவுகார் ஜானகி அம்மாவுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. பாரதி விஷ்ணுவர்த்தன், ராதிகா சரத்குமார் ஆகியோருக்கும் கவுரவிக்கப்பட்டார்கள்.

எங்களது பணியினை நேர்மறையாக தொடங்க இருக்கிறோம். இதன் பிறகு, கட்டடம் கட்டுவதற்கு எந்த தடங்களும், தடைகளும், சச்சரவுகளும் வராது என்று நம்புகிறோம். இது சாதாரண கட்டிடமாக இருக்காது. சென்னையில் ஒரு அடையாளமாகவே இருக்கும். வெளியூரில் இருந்து சென்னைக்கு வருபவர்கள் அனைவரும் ஒரு முறையாவது நடிகர் சங்க கட்டிடத்தையும் பார்க்க வேண்டும் என்ற ஆவலோடும் வர வேண்டும். அதை மனதில் வைத்துதான் இந்தக் கட்டிடத்தைக் கட்டுகிறோம்…” என்றார்.

சங்கத்தின் பொருளாளரான நடிகர் கார்த்தி பேசும்போது, “நடிகர் சங்க கட்டிடத்தின் மூலம் ESI, காப்பீடு, ஓய்வுதியம், மருத்துவ செலவுகள், ஈமச் சடங்கு உதவி போன்ற செலவுகள் போக குறைந்தபட்சம் ஒன்றரை கோடியில் இருந்து இரண்டரை கோடி ரூபாய்வரையிலும் மீதம் இருக்கும். இந்த வருமானம் போதுமானதாக இருக்கும்…” என்றார்.

- Advertisement -

Read more

Local News