வித்தியாசமான களங்களைத் தேர்வு செய்து, தயாரித்து அதில் வெற்றியும் பெற்று வரும் நிறுவனம் 2-டி.
’36 வயதினிலே’ படம் தொடங்கி சமீபத்திய ‘சூரரைப் போற்று’ படம் வரை இந்த நிறுவனத்தின் வித்தியாசமான கதைத் தேர்வு அனைவருக்கும் தெரியும். தற்போது தங்களுடைய 14-வது படத்தைத் துவக்கியிருக்கிறது சூர்யாவின் 2-டி நிறுவனம்.
இந்தப் படத்தில் ரம்யா பாண்டியன் பிரதான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவருடன் வாணி போஜனும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
மேலும், இந்தப் படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு கதாநாயகனாக அறிமுகமாகிறார் நடிகர் மிதுன் மாணிக்கம். இவர்களுடன் இணைந்து ‘கோடங்கி’ வடிவேல் முருகன், செல்வேந்திரன் ஆவுடையப்பன் உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளனர்.
இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார் அரிசில் மூர்த்தி. பல்வேறு படங்களுக்கு தன் கேமரா கோணங்களால் அழகூட்டிய ஒளிப்பதிவாளர் சுகுமார் இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவாளராக பணிபுரியவுள்ளார். தன் குரலால் கிறங்கடித்த க்ரிஷ், இந்தப் படத்துக்கு இசையமைக்கவுள்ளார். தன் இசையாலும் கிறங்கடிப்பார் என்று எதிர்பார்க்கலாம்.
தயாரிப்பாளர் – சூர்யா, இணை தயாரிப்பாளர் – ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன், எழுத்து, இயக்கம் – அரிசில் மூர்த்தி, ஒளிப்பதிவு – M.சுகுமார், இசை – க்ரிஷ், படத் தொகுப்பு – சிவ சரவணன், கலை இயக்கம் – சி.கே.முஜிப்பூர் ரஹ்மான், ஆடை வடிவமைப்பு – வினோதினி பாண்டியன், பாடல்கள் – யுகபாரதி, விவேக், மதன்குமார், சண்டை வடிவமைப்பு – ராக் பிரபு, தயாரிப்பு நிர்வாகம் – செந்தில் குமார், மக்கள் தொடர்பு – யுவராஜ்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் சென்னை கோகுலம் ஸ்டுடியோவில் இன்று ஆரம்பமானது.
இந்த நிகழ்ச்சியில் படக் குழுவினருடன் ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி கே.வெங்கட்ராமன், தமிழ்நாடு துப்பாக்கி சுடுதல் சங்க செயலாளர் ஆர்.ரவி கிருஷ்ணன், இணை தயாரிப்பாளர் ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன், சக்தி பிலிம் பேக்டரி B.சக்திவேலன், கலரிஸ்ட் பாலாஜி கோபால், இயக்குநர் ஜே.ஜே,ஃபிரடெரிக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
2-டி எண்ட்டெர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் முந்தைய படங்களைப் போலவே, இந்தப் படமும் பார்வையாளர்களுக்குப் புதுவிதமான அனுபவத்தைக் கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.