இயக்குநர் பாலாவுடன் மீண்டும் இணையப் போவதை நடிகர் சூர்யா உறுதிப்படுத்தியுள்ளார்.
இயக்குநர் பாலா தனது அடுத்தப் படத்தை இன்னமும் அறிவிக்காமல் இருக்கிறார். அதர்வா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் புதிய படத்தை பாலா இயக்கப் போவதாகவும் இந்தப் படத்தை நடிகர் சூர்யா தனது 2-டி எண்ட்டெர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கப் போவதாகவும் செய்திகள் வெளிவந்தன. ஆனால் இதை சூர்யாவோ, பாலாவோ உறுதிப்படுத்தாமல் இருந்தனர்.
இப்போது கூட்டணியை மட்டும் சூர்யா உறுதிப்படுத்தியுள்ளார். சூர்யாவின் தந்தையான நடிகர் சிவக்குமார் நேற்று தனது 80-வது பிறந்த நாளை கொண்டாடினார்.
இந்த விழாவுக்கு இயக்குநர் பாலாவும் வந்திருந்தார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்துடன் இன்றைக்கு தனது டிவீட்டர் பக்கத்தில் இது பற்றிய செய்தியை நடிகர் சூர்யா வெளியிட்டுள்ளார்.
அந்தச் செய்தியில், ‛‛என்னைவிட என் மீது அதிக நம்பிக்கை வைத்தவர். ஒரு புதிய உலகை எனக்கு அறிமுகம் செய்து அடையாளம் தந்தவர். 20 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் அதே ஆர்வத்துடன் அவர் முன் நான். அப்பா ஆசீர்வதிக்க மீண்டும் ஓர் அழகிய பயணம் என் பாலா அண்ணனுடன்… அனைவரின் அன்பும் ஆதரவும் தொடர வேண்டுகிறேன்..” என்று பதிவிட்டுள்ளார் சூர்யா.
அதேசமயம் பாலா இயக்கவிருக்கும் இந்தப் படத்தை சூர்யா தயாரிக்கிறாரா… அல்லது நடிக்கிறாரா என்பது குறித்து சூர்யா எதையும் தெரிவிக்கவில்லை.
விரைவில் படம் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.