தமிழ்த் திரையுலகத்தில் சினிமா பத்திரிகையாளர், சினிமா மக்கள் தொடர்பாளர், தயாரிப்பாளர், கதாசிரியர், இயக்குநர், நடிகர் என்று பன்முகத் தன்மை கொண்டவர் சித்ரா லட்சுமணன்.
தமிழ்ச் சினிமாவின் மூத்தப் பத்திரிகையாளரான சித்ரா லட்சுமணன், தமிழ் சினிமாவுலகில் நடந்த சுவையான தகவல்களையும், திரைக் கலைஞர்கள் வாழ்க்கையில் நடந்த பல அரிய சம்பவங்களையும் தொகுத்து ‘80 ஆண்டு கால தமிழ் சினிமா முதல் பாகம்’ என்ற பெயரில் ஏற்கெனவே ஒரு புத்தகத்தை எழுதியிருக்கிறார்.
இதைத் தொடர்ந்து திரையுலகில் தனக்கேற்பட்ட அனுபவங்களை ‘என்னவென்று சொல்வேன்’ என்ற பெயரில் எழுதினார்.
இப்போது ‘நெஞ்சம் மறப்பதில்லை-முதல் பாகம்’ என்ற பெயரிலே தன்னுடைய மூன்றாவது புத்தகத்தை வெளிக்கொண்டு வந்துள்ளார்.
சினிமா உலகில் நடந்த பல சுவையான சம்பவங்களைப் பற்றி மூன்றாண்டு காலம் தொடர்ந்து ‘ மாலை மலர்’ நாளிதழில் ஒவ்வொரு வாரமும் சித்ரா லட்சுமணன் எழுதிய கட்டுரைகளின் தொகுப்புதான் இந்த புத்தகம்.
ஜீரோ டிகிரி பப்ளிகேஷன் சார்பில் ராம்ஜி – காயத்ரி ஆகிய இருவரும் இணைந்து வெளியிட்டுள்ள இந்தப் புத்தகத்தின் வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது.
‘உலக நாயகன்’ கமல்ஹாசன் இந்த ‘நெஞ்சம் மறப்பதில்லை’ புத்தகத்தின் முதல் பிரதியை வெளியிட்டார்.
அப்போது “உங்களுடையஅனுபவங்கள் எல்லாவற்றையும் புத்தகமாக எழுதுங்கள் என்று எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்னால் உங்களுக்கு நான் சொன்னேன். இப்பொழுதுதான் எழுத ஆரம்பித்து இருக்கிறீர்கள். பாராட்டுக்கள்..” என்று சித்ரா லட்சுமணனை சிரித்தபடியே வாழ்த்தினார் ‘உலக நாயகன்’ கமல்ஹாசன்.








