இயக்குநர் மு.களஞ்சியம் இயக்கிய ‘கருங்காலி’ படத்தில் அஞ்சலிக்கு ஜோடியாக நடித்து கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் சேத்தன் சீனு.
இவர் ‘அஞ்சலி’, ‘சேதுபதி ஐ.பி.எஸ்.’ படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார். சினிமாவுக்கென முழுதாக தயாரான சமயத்தில்தான், ‘கருங்காலி’ படத்தில் முதன்முதலாக நாயகனாக நடித்தார்.
பின்பு விஷாலுடன் நான் சிவப்பு மனிதன், தெலுங்கில் நடிகை சார்மி கதாநாயகியாக நடித்த ‘மந்த்ரா-2’, ‘ராஜூ காரி கதி’, ‘பெல்லிக்கி முந்து பிரேமகதா’ ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.
தற்போது ‘புன்னகை பூவே’, ‘கண்ணுக்குள் நிலவு’, ‘காசி’, ‘சமுத்திரம்’ உள்ளிட்ட பல படங்களில் கதாநாயகியாக நடித்த நடிகை காவேரி கல்யாணி தமிழ், தெலுங்கில் உருவாக்கி வரும் பான் இந்திய படத்தில் நாயகனாக நடித்திருக்கிறார்.
இந்தப் படத்தில் நான்கு கதாநாயகிகள் நடித்துள்ளனர். இதில் தற்போது கவுதம் மேனன் இயக்கத்தில் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்துள்ள சித்தி இத்னானியும் ஒருவர். சுகாசினி, ஸ்ரீகாந்த், விஜய் டிவி புகழ் உள்ளிட்ட பல நடிகர்கள் இதில் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இது தவிர தெலுங்கு, மற்றும் தமிழில் உருவாகி வரும் ‘வித்யார்த்தி’ என்கிற படத்தில் நடித்து வருகிறாராம் சேத்தன் சீனு.
இது பற்றி சேத்தன் சீனு கூறுகையில், “ஆணவக் கொலையை மையப்படுத்தி உண்மையில் நடைபெற்ற சம்பவங்களின் அடிப்படையில் இந்தப் படம் உருவாகியுள்ளது. இதுவும் ரிலீஸுக்கு தயாராக இருக்கிறது.
இந்த இரண்டு படங்களும் தமிழிலும் வெளியாவதால் இதன் மூலம் ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு தமிழுக்கு திரும்புகிறேன். அதுமட்டுமல்ல, தற்போது ஆஸ்திரேலிய தயாரிப்பாளர் ஒருவரின் தயாரிப்பில் தமிழில் உருவாகும் ஒரு படத்திலும் நடித்து வருகிறேன்.
நடிகர் விஜய் சேதுபதி போல எந்த கதாபாத்திரம் என்றாலும் நடிக்க கூடிய ஒரு நல்ல நடிகராகவே என்னை அடையாளப்படுத்திக் கொள்ள விரும்புகிறேன். எல்லோருக்கும் ஒரு நேரம் வரும்.
ஒரு வெள்ளிக்கிழமை காலை ஷோ ஒரு நடிகரின் தலையெழுத்தையே மாற்றி அவரை ஸ்டார் ஆக்கிவிடும்.. எனக்கென ஒரு வெள்ளிக்கிழமை நிச்சயம் இருக்கும் என்கிற நம்பிக்கையில் விடாமுயற்சி செய்து வருகிறேன்..” என தனது மனதில் உள்ளவற்றை வெளிப்படையாக பேசினார் சேத்தன் சீனு..