Thursday, April 11, 2024

“ஒரு மேஜிக் இந்தப் படத்தில் ரசிகர்களுக்காகக் காத்திருக்கிறது” – சிலம்பரசன் பேச்சு

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

Vels Film International நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் Dr.ஐசரி K கணேஷ் தயாரிப்பில், கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், A.R.ரஹ்மான் இசையில், சிலம்பரசன் நடித்துள்ள படம் ‘வெந்து தணிந்தது காடு.’

எழுத்தாளர் ஜெயமோகன் கதை, திரைக்கதை, வசனம் எழுதியிருக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஆண்டனி (படத் தொகுப்பு), தாமரை (பாடல் வரிகள்), பிருந்தா (நடன அமைப்பு), உத்தாரா மேனன் (ஸ்டைலிங் மற்றும் காஸ்ட்யூம்ஸ்), லீ விட்டேக்கர்-யானிக் பென் (சண்டை பயிற்சி இயக்குநர்கள்), அஷ்வின் குமார் (நிர்வாகத் தயாரிப்பாளர்), G.பாலாஜி (வண்ணக் கலைஞர்), சுரேன் G, அழகியகூத்தன் (ஒலி வடிவமைப்பு), சுரேன்.G (ஒலி கலவை), மற்றும் ஹபீஸ் (உரையாடல் ரெக்கார்டிஸ்ட்) ஆகியோர் தொழில் நுட்பக் குழுவில் பணியாற்றியுள்ளனர்.

இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை, ரசிகர்களின் முன்னிலையில் வேல்ஸ் பல்கலைக் கழகத்தின் மிகப் பிரம்மாண்டமான ஐசரி வேலன் அரங்கத்தில் கோலகலமாக நடைபெற்றது.

திரைப் பிரபலங்கள், படக் குழுவினர் மற்றும் பத்திரிக்கை ஊடக நண்பர்கள் இவ்விழாவினில் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பேசும்போது, “கௌதம் ஒரு இசைக் காதலன். அவர் எந்த டியூன் தந்தாலும் எடுத்துக் கொள்வார். அதனால் அவரின் நம்பிக்கைக்காக நான் நிறைய உழைப்பேன். நல்ல பாடல்கள் தர முயல்வேன்.  தாமரை வரிகள் எழுதும்போது அந்த பாடல்கள் ஸ்பெஷலாக மாறிவிடும். கௌதம் படத்தை நன்றாக எடுத்து விடுவார் என தெரியும். அதனால்தான் அவருடன் தொடர்ந்து வேலை செய்கிறேன். அப்புறம் சிம்புவையும் எனக்கு மிகவும் பிடிக்கும். அவருக்காகவும்தான் இந்தப் படத்திற்கு இசையமைத்தேன். பாடல்களும், படமும் நன்றாக வந்துள்ளது…” என்றார்.

நடிகர் நாசர் பேசும்போது, “கௌதம் மேனன் நிறைய ஆச்சர்யங்களை தருவார். இந்தப் படத்திலும் கண்டிப்பாக அசத்துவார் என்று நம்புகிறேன். கௌதம் மேனனிடம் எப்போதும் சிறப்பானது டைட்டில்தான். இந்தப் படத்திலும் டைட்டில் நன்றாக இருக்கிறது. சிம்பு மிக நன்றாக நடிப்பவர். இந்தப் படம் அவருக்கு நல்ல வெற்றியை தரும். படக் குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள்..” என்றார்.

நடிகர் R.J.பாலாஜி பேசும்போது, “சிம்பு என் நண்பர். அவர் திறமைக்கு இன்னும் மிகப் பெரிய விசயங்களை அவர் செய்யலாம் என அவரிடம் பேசும்போதெல்லாம் சொல்லிக் கொண்டிருப்பேன். இப்போது மாநாடு’, ‘வெந்து தணிந்தது காடு’ என்று அவர் நிறைய புதுமையான படங்களில் நடிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.

இந்தப் படத்தை கௌதம் மிக நன்றாக இயக்கியிருக்கிறார். கௌதம் இப்பொதெல்லாம் எல்லா படங்களிலும் நடிக்க ஆரம்பித்து விட்டார். எல்லா படங்களிலும் இருக்கிறார். வேல்ஸ் அங்கிள் என் தந்தைபோல். அவருக்கு சினிமா மீது இருக்கும் காதல் மிகப் பெரியது. சினிமா துறையை சேர்ந்த நிறைய பேருக்கு பல உதவிகள் செய்து வருகிறார். நான் கேட்டே பல விசயங்கள் செய்துள்ளார். இந்தப் படம் பெரிய வெற்றியை பெற வாழ்த்துக்கள்…” என்றார்.

நடிகர் ஜீவா பேசும்போது, “இவ்வளவு பிரம்மாண்டமான விழாவை காண மகிழ்ச்சியாக இருக்கிறது. வேல்ஸ் ஃபிலிம்ஸ்  தரமான படங்களை தேர்வு செய்து அசத்தி வருகிறார்கள். ஜீ.வி.எம்., எஸ்.டி.ஆர்., ஏ.ஆர்.ஆர். கூட்டணி அனைவரும் எதிர்பார்க்கும் கூட்டணி.  கண்டிப்பாக படம் புதுமையான ஒன்றாகத்தான் இருக்கும். கௌதமுடன் நான் வேலை பார்த்திருக்கிறேன். அவர் ஒரு தரமான இயக்குநர். நல்ல படங்களை உருவாக்கும் ஆர்வமுள்ளவர். இந்தப் படமும் வெற்றி பெற வாழ்த்துக்கள்…” என்றார்.

நடிகை ராதிகா பேசும்போது, “ஐசரி கணேஷ் அவர்களுக்கு வாழ்த்துக்கள். இன்று இங்கு ரெண்டு நாயகர்கள் இருக்கிறார்கள். ஏ.ஆர்.ஆர்., சிம்பு. சிம்புவை சின்ன வயதிலிருந்தே பார்த்து கொண்டிருக்கிறேன். அவனை உரிமையோடு திட்டுவேன். திறமையை வைத்து கொண்டு வீணாக்காதே என்பேன். இந்தப் படத்தில் மிரட்டியிருக்கிறார். நடிப்பில் அசத்திவிட்டார். ஆடியன்ஸ்க்கு நிறைய சர்ப்ரைஸ் இந்தப் படத்தில் இருக்கிறது. நிச்சயமாக படம் எல்லோருக்கும் பிடிக்கும்.” என்றார்.

நாயகி சித்தி பேசும்போது, “ரொம்ப, ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. இந்த வாய்ப்பு எனக்கு மிகப் பெரியது. இந்தப் படம் பற்றிய அறிவிப்பு முதலில் வந்தபோது ஜீ.வி.எம்., எஸ்.டி.ஆர்., ஏ.ஆர்.ஆர். கூட்டணியில் நடிக்கும் நாயகி லக்கியஸ்ட் கேர்ள் என நினைத்தேன். அதிர்ஷடவசமாக அந்த வாய்ப்பு எனக்கு வந்தது.

கௌதம் படத்தில் நாயகியாக நடிப்பது எல்லோருக்கும் கனவு. அவர் படங்களில் நாயகிக்கு அவர் கொடுக்கும் முக்கியத்துவம் அனைவருக்கும் தெரியும். சிம்பு மிகச் சிறந்த நடிகர். அவருடன் நடித்ததும் மிக அற்புதமான அனுபவம். ஏ.ஆர்.ஆர். என் வாழ்க்கையில் முக்கிய கட்டங்களில் இசையாக உடனிருந்துள்ளார். இந்தப் படம் மிகச் சிறப்பாக வந்துள்ளது அனைவரும் ஆதரவு தாருங்கள்…” என்று கேட்டுக் கொண்டார்.

தயாரிப்பாளர் Dr ஐசரி K கணேஷ் பேசும்போது, “கமல்ஹாசன் சார் என் கலையுலக குருவாக இருப்பவர். அவர் இந்த விழாவிற்கு வந்தது மகிழ்ச்சி. தம்பி சிம்பு இந்தப் படத்திற்காக உடல் எடையைக் குறைத்து, மிக கடினமாக உழைத்துள்ளார்.

இந்தப் படத்தை கௌதம் சிறப்பாக உருவாக்கியுள்ளார். இந்தப் படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும். இந்தப் படத்தை Red Giant Movies சார்பில் உதயநிதி வெளியிடுகிறார். அது இந்தப் படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளது. உதயநிதி அவர்களுக்கும் நன்றி..” என்றார்.

நடிகர் டி.ஆர்.சிலம்பரசன் பேசும்போது, “எனக்கு இந்த மாதிரி பிரம்மாண்டமான விழா எதுவும் சமீபத்தில் நடக்கவில்லை. இந்த பிரம்மாண்டத்தை பார்த்ததும் நம் விழாதானா என்று சந்தேகமே வந்துவிட்டது. இங்கு கமல் சார் வந்திருக்கிறார். அவர் எனது ‘விண்ணை தாண்டி வருவாயா’ விழாவிற்கும் வந்திருந்தார். அந்தப் படம்போல் இதுவும் ஹிட்டாகும் என நம்புகிறேன்.

தயாரிப்பாளர் வேல்ஸ் என்னை மகனை போல் பார்த்து கொண்டார். என் அப்பாவை மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு கூட்டிப் போனதிற்கு முழு காரணம் அவர்தான்.

கௌதம் வாசுதேவ் மேனனுடன் நான் இணையும் மூன்றாவது படம் இது. நாங்கள் சேர்ந்தால் அதில் ஒரு மேஜிக் நிகழ்ந்து விடும். படத்தில் ஏதாவது புதிதாக செய்வோம். இந்தப் படத்திலும் அது இருக்கும். ஏ.ஆர்.ரஹ்மான் சார் எனக்கு எப்போதும் நல்ல பாடல்களைதான் தருவார். அவருக்கு நன்றி.

சித்தி இந்தப் படத்தில் அறிமுகமாகிறார் நன்றாக நடித்துள்ளார். படத்தில் உழைத்திருக்கும் தொழில் நுட்பக் கலைஞர்களுக்கும் மற்ற நடிகர்கள் அனைவருக்கும் நன்றி.

முதலில் ஒரு காதல் கதையாக செய்வதாகத்தான் இருந்தது. “இந்தப் படத்தில் வேறு ஏதாவது புதுசாக செய்யலாம்…” என்றேன். அப்போதுதான் ஜெயமோகனின் கதை வந்தது. இதில் 19 வயது பையனாக நடித்திருக்கிறேன். படம் பற்றி நாம் பேசக் கூடாது. ரசிகர்கள்தான் படத்தைப் பார்த்து சொல்ல வேண்டும். இந்தப் படம் அனைவருக்கும் பிடிக்குமென நம்புகிறேன்..” என்றார்.

- Advertisement -

Read more

Local News