மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன், ரெஜிஷா விஜயன் ஆகியோர் நடித்துள்ள ‘பைசன்’ திரைப்படம் வருகிற 17-ந்தேதி தீபாவளி வெளியீடாக திரைக்கு வருகிறது. ‘பைசன்’ படம் குறித்து துருவ் விக்ரம் கூறும்போது, “இதுவரை என் வாழ்க்கையில் நான் எந்த விளையாட்டிலும் கலந்து கொண்டது கிடையாது. முதல் முறையாக இந்த படத்துக்காக தான் கபடி விளையாடினேன்.

படப்பிடிப்பின்போது என் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. என் தந்தையிடம் (விக்ரம்) தகவலை சொன்ன போது, ஆறுதல் கூட சொல்லாமல் சந்தோஷப்பட்டார். ‘சினிமாவில் இது சகஜம். இதை பழகிக் கொண்டால் முன்னேறலாம்’ என்றார்.
என் தந்தையுடன் என்னை ஒப்பிட முடியாதுதான். இருந்தாலும் அவரை நடிப்பு ரீதியாக தோற்கடிக்க நான் தொடர்ந்து முயற்சிப்பேன். வாரிசு நடிகர் என்று எளிதில் விமர்சனம் செய்துவிடலாம். அது போன்ற விமர்சனங்களை முறியடிப்பதற்காகவே வலி நிறைந்த இந்த பயணத்தில் தொடர்ந்து பயணிப்பேன். என்னை யார் என்று அடையாளப்படுத்த தொடர்ந்து இது மாதிரியான படங்களில் நடித்து பெயர் எடுப்பதே என் லட்சியம்”, என்றார்.