ஆந்திராவின் துணை முதல்வரான பவன்கல்யாண் நடிக்கும் ‘ஹரிஹர வீரமல்லு’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வருகிற ஜூன் 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தை ஆரம்பத்தில் இயக்குநர் கிரிஷ் இயக்கத் தொடங்கினார். ஆனால், பல தடைகளால் படப்பிடிப்பு தாமதமான நிலையில், பின்னர் மீதமுள்ள படப்பிடிப்பை தயாரிப்பாளரான ஏ.எம்.ரத்னத்தின் மகன் ஜோதி கிருஷ்ணா முடித்துள்ளார். இத்திரைப்படத்திற்கு ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி இசையமைத்துள்ளார். இதற்குப் பெருமையாக, ஹீரோவாக நடித்துள்ள பவன்கல்யாண், ‘கேட்கணும் குருவே’ எனும் ஒரு தமிழ் பாடலை தனது சொந்த குரலில் பாடியுள்ளார்.

தெலுங்கு சினிமாவில் தற்போது தத்துவப் பாடல்கள் அதிகம் வருவதில்லை. அரசியலில் உள்ள பவன்கல்யாண், இப்படத்தில் தத்துவப் பாடலொன்றை பாடியுள்ளார் என்பது சிறப்பு. அதேபோல, குடிக்கு ஆதரவாக அமைந்திருந்த சில வசனங்களை அவர் சொல்வதைத் தவிர்த்து விட்டதாகவும் கூறப்படுகிறது. “நான் துணை முதல்வராக இருப்பதால், இப்படிப்பட்ட வசனங்களைப் பேச முடியாது” என அவர் குறிப்பிட்டுள்ளதாகவும், ஒரு பாடல் காட்சியிலும் சில சர்ச்சைக்குரிய வரிகளை அகற்றுமாறு கூறியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இப்படத்தில் அவர், முகலாய மன்னர் அவுரங்கசீப்புக்கு எதிராகப் போராடும் அல்லது அவன் ஆதரவாளர்களிடமிருந்து ஒரு முக்கியமான பொருளை பாதுகாக்கும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஐதராபாத் மற்றும் சென்னை ஆகிய நகரங்களில் நடைபெற்ற நிகழ்வுகளுக்குப் பிறகு, இப்படத்தின் அடுத்த பிரமாண்ட விழா திருப்பதியில் நடைபெறவுள்ளதாகவும், அந்த நிகழ்வில் பவன்கல்யாண் கலந்துகொண்டு படம் தொடர்பாக பேச உள்ளதாகவும் கூறப்படுகிறது.