பிரபல பாலிவுட் நடிகர் வருண் தவான் நடிக்கும் பான்-இந்தியா திரைப்படம் ‘பெடியா.’
மேடாக் பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தை ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் தினேஷ் விஜன் இணைந்து வழங்குகின்றனர்.
இந்தப் படத்தில் வருண் தவான், கீர்த்தி ஷெட்டி, தீபக் தோப்ரியால் மற்றும் அபிஷேக் பேனர்ஜீ ஆகியோர் நடித்துள்ளனர்.
‘ஸ்ரீ’ மற்றும் ‘பாலா’ படங்களுக்கு பிறகு ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் மேடாக் பிலிம்ஸ் தயாரிப்பில் இது அமர் கௌஷிக்கின் மூன்றாவது படமாகும்.
‘பத்லாபூர்’ படத்தின் வெற்றிக்கு பிறகு வருண் மற்றும் தினேஷ் இணையும் படம் இந்த ‘பெடியா’ என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது.
பாலிவுட்டில் வருண் தவானின் 10-வது ஆண்டை கொண்டாடும்விதமாக இந்த ‘பெடியா’ படத்தின் டிரெயிலர் தற்போது தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளது.
படம் பற்றிய முதல் அறிவிப்பே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், இப்போது வெளியாகியுள்ள இந்தப் படத்தின் டிரைலர், இந்த எதிர்பார்ப்பை மேலும் அதிகப்படுத்தியுள்ளது. படம் முழுவதும் சிரிப்பு மற்றும் திகில் கலந்த பயணமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பையும் இந்த டிரெயிலர் அதிப்படுத்தியுள்ளது.
புராண கதைகளில் வரும் ஓநாய் (பெடியா) ஒன்றினால் கடிப்பட்டு ஓநாய் மனிதனாக மாறிய பாஸ்கர் என்பவரை பற்றிய கதை இது. இந்த நிலைமைக்கு தீர்வு காண்பதற்கான பாஸ்கர் மற்றும் அவரது நண்பர்களின் தேடலில் பல திருப்பங்கள் நிறைந்திருக்கின்றன. ஓநாய் மனிதனாக வருண் தவான் செய்யும் விஷயங்கள் சுவாரஸ்யமான முறையில் இந்த டிரெயிலரில் இடம் பெற்றுள்ளன.
டிரைலரில் வருண், கீர்த்தி, தீபக் தோப்ரியல் மற்றும் அபிஷேக் பேனர்ஜீ இடையேயான காட்சிகள் ரசிக்கும்படியாக உள்ளன.
முழுக்க, முழுக்க அருணாச்சல மாநில காடுகளில் படமாகியிருக்கும் இந்தப் படத்தில் பிரமாண்டமான கிராபிக்ஸ் காட்சிகளும் இடம் பெற்றுள்ளது.
டாப் கன் மேவ்ரிக், மோர்ட்டல் காம்பாட், காட்ஜில்லா Vs காங், மற்றும் ஆட் அஸ்திரா ஆகிய படங்களுக்கு கிராபிக்ஸ் செய்த விருது பெற்ற நிறுவனமான எம்பிசி இந்த படத்திற்கு கிராபிக்ஸ் பணிகளை செய்துள்ளது.
இந்த டிரெயிலரை பற்றி இயக்குநர் அமர் கௌஷிக் கூறுகையில், “படத்தில் இடம் பெறும் சுவாரசியமான நிகழ்வுகளுக்கு ஒரு முன்னோட்டமாக இது இருக்கும். திரையரங்குளில் பார்த்து ரசிப்பதற்காக எடுக்கப்பட்ட படம்தான் ‘பெடியா’. இப்படம் ரசிகர்களை கட்டாயம் மகிழ்விக்கும் என்கிற நம்பிக்கை எனக்கிருக்கிறது…” என்றார்.
தயாரிப்பாளர் தினேஷ் விஜன் கூறுகையில், “குறைந்த காலத்தில் உலகத் தரம் வாய்ந்த ஒரு படத்தை தருவதற்காக எங்களது மேடாக் நிறுவனம் எடுத்து கொண்ட முயற்சியே இந்த ’பெடியா’ திரைப்படம்.
தரமான கிராபிக்ஸ் காட்சிகளோடு உருவாகியுள்ள இப்படத்தை குடும்பத்துடன் கொண்டாட்டமாக ரசிக்கலாம். அனைத்து தலைமுறையினரையும் கவரும் ஒரு சினிமா அனுபவமாக இது இருக்கும். காமெடி மற்றும் திகில் நிறைந்த, இந்தியாவின் முதல் ஓநாய் மனிதனின் சாகசங்கள் குறித்த படமாக இது உருவாகியுள்ளது…” என்றார்.
இந்த ‘பெடியா’ படம் வரும் நவம்பர் 25-ம் தேதியன்று தமிழ், ஹிந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் பான்-இந்தியா படமாக வெளியாகவுள்ளது.