ஏவி.எம். நிறுவனத் தயாரிப்பாளர்களில் ஒருவரான ஏவி.எம். சரவணனின் பேத்தியான அபர்ணாவின் கணவர் நடிகர் ஆர்யன் ஷியாம். தற்போது இவர், ‘அந்த நாள்’ என்ற படத்தை தயாரித்து அதில் நாயகனாக நடித்துள்ளார்.
இந்தப் படத்தில் நாயகிகளாக ஆத்யா, லீமா பாபு ஆகியோர் நடிக்க இமான் அண்ணாச்சி ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தை இயக்குநர் வி.வி., இயக்கியுள்ளார். விரைவில் இப்படம் வெளியாக உள்ளது.
‘அந்த நாள்’ படம் குறித்த செய்தியாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இந்தச் சந்திப்பில் நடிகரும், தயாரிப்பாளருமான ஆர்யன் பேசும்போது, “நான் இயக்குநர் மிஷ்கினின் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிப்பதாக இருந்தது. அதற்காக அவருக்கு ஒரு கோடி ரூபாய், முன் பணம் அளித்தேன். ஆனால், அந்தப் படத்தின் உருவாக்கம் தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது.

எனது படம் துவங்கப்படுவதாகவே தெரியாமல் இருந்தது. மிஷ்கினும் தான் வாங்கிய அட்வான்ஸ் தொகையைத் திரும்பத் தரவில்லை. அப்போதைய சூழலில் செய்தியாளர்களைச் சந்தித்து எனது ஆதங்கத்தைத் தெரிவித்திருந்தேன்.
தற்போது தான் வாங்கிய அட்வான்ஸ் தொகையை மிஷ்கின் என்னிடம் திரும்ப அளித்துவிட்டார். தவிர அவரது சார்பில், ‘மிஷ்கின் அட்வான்ஸ் பணத்தை திருப்பித் தரவில்லை என மீடியாவில் நீங்கள் கூறியதால் அவருக்குத் திரையுலகத்தில் அவப் பெயர் ஏற்பட்டு விட்டது. ஆகவே அட்வான்ஸ் தொகையை இப்போது திருப்பி அளித்ததையும் மீடியாவை அழைத்துச் சொல்லிவிடுங்கள்’ என்று கூறினார்கள். ஆகவேதான் இந்தத் தகவலை சொல்கிறேன்..” என்றார்.