மனித மனங்கள் எப்பவும் மாயாஜாலங்களை விரும்பக் கூடியவை. அன்றைய ப்ளாக் & வொய்ட் சினிமாவில் இருந்து இன்றைய ஓடிடி சினிமாவரை மக்கள் பயம் காட்டும் பேய், மாயாஜாலம் நிறைந்த படங்களை விரும்பி பார்த்து வருகிறார்கள்.
மாயாஜால படங்களைப் பொறுத்தவரை ஓரளவு மினிமம் கேரண்டி என்ற நிலை இருப்பதால் தயாரிப்பாளர்களும் அந்த மாதிரியான படங்களுக்கு முன்னுரிமை கொடுக்கிறார்கள்.
இந்நிலையில் சமீபத்தில் மலேசியாவில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற ‘பூசாண்டி வரான்’ என்ற திரைப்படம் தமிழகமெங்கும் வெளியாகியுள்ளது. இந்தப் படமும் மாயாஜாலம் நிறைந்த படம்தான். இப்படத்தின் கதையும், தரமும் எப்படி இருக்கிறது?
படத்தின் நாயகன் மிர்ச்சி ரமணா பழைய பொருட்களை சேகரிப்பதில் பெரும் ஆர்வம் கொண்டவர். அவர் தொல் பொருட்களை ஆராய்ச்சி செய்யும் பொருட்டு மலேசியா வருகிறார். அங்கு மூன்று பேர் இவருக்கு நண்பர் ஆகின்றனர்.
அந்த மூவரிடமும் ஓர் பழங்கால நாணயம் ஒன்று இருக்கிறது. அந்த நாணயம் மூலம் மல்லிகா என்றொரு இறந்த பெண்ணிடம் மூவரும் பேசுகிறார்கள். எதிர்பாராதவிதமாக அந்த மூன்று நண்பர்களில் ஒருவர் இறந்து விடுகிறார்.
இதனால் நாயகன் மிர்ச்சி ரமணா, மல்லிகா என்ற பெண் யார்? அவர் எப்படி இறந்தார்? என மீதமிருக்கும் இரண்டு நண்பர்களை வைத்து தேடலில் இறங்குகிறார்.
அதன் பிறகு பலவிதமான ட்விஸ்ட்கள் அரங்கேற.. முடிவில் ஹீரோ டீமிற்கு எப்படியான ரிசல்ட் கிடைத்தது என்பதே இந்த ‘பூசாண்டி வரான்’ படத்தின் கதை.
மிர்ச்சி ரமணா படத்தின் நாயகன் போல் தோற்றமளித்தாலும் படத்தில் வரும் எல்லோருக்குமே முக்கியமான வேலை இருப்பதால் யாரையும் குறிப்பிட்டு இவர்தான் ஹீரோ என்று சொல்லிவிட முடியாது.
லோகன், தினேஷ், மனோகரன், ஹம்ஸ்னி என படத்தில் அனைவருமே நல்ல நடிப்பை வழங்கியிருக்கிறார்கள். குறிப்பாக க்ளைமாக்ஸ் அருகில் ஒரு நதியில் பள்ளம் தோண்டும் சீக்வென்ஸ் வருகிறது. அந்த சீனில் மூவரின் நடிப்பும் அட்டகாசம். மேலும் அந்தக் காட்சி ஏற்படுத்தும் பதட்டம் படம் முடிந்த பின்னும் தணிய மறுக்கிறது.
ஹாரர் வகை படங்களுக்கு இசைதான் மிக முக்கியம். அதை உணர்ந்து இசை அமைத்துள்ளார் இசைஞர். ஒளிப்பதிவிலும் இப்படம் தனித்துத் தெரிகிறது.
பொதுவாக மலேசிய நாட்டில் தயாரிக்கப்படும் படங்கள் எல்லாம் நம்மை ஓர் அந்நியத் தன்மைக்குள் தள்ளும். காரணம், அவர்கள் வைக்கும் கேமரா கோணங்களும், பேசும் வசனங்களும் நாம் ரெகுலராகப் பார்க்கும் சினிமாவோடு ஒத்துப் போகாது. ஆனால், இப்படம் விதிவிலக்காக அசத்தி இருக்கிறது.
படத்தின் நீளம் ஒரு ப்ளஸ். இரண்டு மணி நேரமும், பதினெட்டு நிமிடங்களும்தான் படம். ஆனால், இன்னும் கால் மணி நேரப் படத்தை எடிட்டர் கட் செய்திருக்கலாம். இயக்குநர் ஜே.கே விக்கி அதற்கு இசைந்திருக்கலாம்.
அதேபோல் நிறைய விசயங்களை வெறும் வசனங்களாகவே பேசி கடந்து போய்விடுகிறார்கள். கதை மொழி போல காட்சி மொழிக்கும் முக்கியத்துவம் கொடுத்திருக்கலாம். படத்தில் இப்படியான சின்னச் சின்ன குறைகள் மிகவும் சின்னதாகத்தான் இருக்கின்றன.
ஆகையால் இப்படத்தை ஒரு முறை தியேட்டரில் போய் பார்க்கலாம்.
RATING : 3 / 5