சர்ச்சைக்குரிய ‘த பேமிலி மேன்’ தொடரை இயக்கிய இரட்டை இயக்குநர்களின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கப் போவது உறுதியாகியுள்ளது.
அமேசான் பிரைம் தளத்தில் ஒளிபரப்பான சர்ச்சைக்குரிய ‘த பேமிலி மேன்’ வெப் சீரிசை இயக்குநர்கள் ராஜ் மற்றும் டிகே இருவரும் இயக்கியிருந்தார்கள்.
இந்தத் தொடர் இலங்கையில் தனி நாடு கேட்டு போராடிய விடுதலைப் புலிகள் அமைப்பை கேவலப்படுத்துவதுபோலவும், பெண் விடுதலைப் புலிகளை அவமானப்படுத்துவது போலவும் உள்ளதாக பல்வேறு புகார்கள் எழுந்தன. ஆனால் இந்தப் புகார்களை தொடருக்கான விளம்பர யுக்தியாக மாற்றிக் கொண்டு அதிக லாபத்தைச் சம்பாதித்தது அமேஸான் ஓடிடி நிறுவனம்.
அப்போதே இந்தத் தொடரின் அடுத்த சீஸனில் நடிகர் விஜய் சேதுபதி ஒரு முக்கியக் கதாபாத்திரத்தி்ல் நடிக்கவிருப்பதாகத் தகவல்கள் தெரிவித்தன. ஆனால் அதை விஜய் சேதுபதி மறுக்கவும் இல்லை. ஒத்துக் கொள்ளவும் இல்லை.
தற்போது அந்த இரட்டை இயக்குநர்களிடன் இருப்பது போன்ற புகைப்படத்தை அவர் வெளியிட்டிருக்கிறார். இதன் மூலம் அவர்களின் அடுத்த ஓடிடி தொடரில் விஜய் சேதுபதி நடிக்கவிருப்பது உறுதியாகியுள்ளது.
இந்தத் தொடரில் ஹிந்தித் திரையுலகின் முன்னணி கதாநாயகனாக ஷாகித் கபூர், ராஷி கண்ணா ஆகியோரும் நடிக்கப் போகிறார்களாம்.
“இந்தப் புதிய ஓடிடி தொடர் வேறு கதையைக் கொண்டிருக்கிறது. அதனால்தான் விஜய் சேதுபதி இதில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார்…” என்று விஜய் சேதுபதிக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.