1980-களில் மிகப் பெரிய ஹிட் இயக்குநர்களில் ஒருவராக இருந்தவர் கே.பாக்யராஜ். அவரிடம் உதவி இயக்குநர் வேலைக்குச் சேர்வதற்காக பல இளைஞர்கள் தினமும் அவரது வீட்டு வாசலில் நின்று கொண்டிருப்பார்கள். பலர் வருடக் கணக்காகக் காத்துக் கொண்டிருந்தார்கள்.
நடிகர் பார்த்திபனே சில வருடங்கள் பாக்யராஜின் பின்னால் அலையோ அலைந்துதான் உதவி இயக்குநரானார். அப்படிப்பட்ட கே.பாக்யராஜ் அழைத்தும் “அவரிடத்தில் சேருவதற்கு முடியாது…” என்று மறுத்திருக்கிறார் இயக்குநர் கரு.பழனியப்பன்.
இந்தச் சுவையான சம்பவத்தை சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் இயக்குநர் கரு.பழனியப்பன் சொல்லியிருக்கிறார்.
“பார்த்திபன் ஸார், ‘சோத்துக் கட்சி’ என்ற பெயரில் ஒரு புதிய படத்தை துவக்கினார். இந்தப் புதிய படத்தின் துவக்க விழா ஏவி.எம். ஸ்டூடியோவில் அமர்க்களமாக நடைபெற்றது.
ஒரு கட்சியின் மாநாடு போன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மேடையில் திரையுலகப் பிரபலங்களுடன், பல அரசியல் கட்சிகளின் தலைவர்கள்கூட வந்திருந்தார்கள்.
அன்றைக்கு அந்த நிகழ்ச்சி முழுவதையும் நான்தான் தொகுத்து வழங்கினேன். என் பேச்சை மிகவும் ரசித்துக் கேட்ட இயக்குநர் கே.பாக்யராஜ் நிகழ்ச்சி முடிந்து வெளியேறும்போது பார்த்திபன் ஸாரிடம் என்னைப் பற்றிக் கேட்டிருக்கிறார்.
பார்த்திபனும் என் ஜாதகம்வரையிலும் சொன்ன பிறகு, “அவனை என்னை வந்து பார்க்கச் சொல்லு…” என்று சொல்லிவிட்டுப் போனார். பார்த்திபன் ஸார் உடனேயே என்னிடம் வந்து “நீ பாக்யராஜ் ஸாரை போய் பாரு. உன்னை வரச் சொன்னாரு..” என்றார்.
“நான் போக மாட்டேன்” என்று உறுதியாகச் சொன்னேன். பார்த்திபன் அதிர்ச்சியாகிவிட்டார். “ஏன்.. ஏன்..?” என்றார். “ஸார்.. நீங்களே அவரைப் பத்தி என்கிட்ட நிறைய சொல்லியிருக்கீங்க. ‘ராத்திரில்லாம் விடிய விடிய உக்காந்து கதை, திரைக்கதை டிஸ்கஷன் செய்வாரு. ஷூட்டிங் டைம்லகூட திரைக்கதையை மாத்துவாரு.
அப்படித்தான் ‘முந்தானை முடிச்சு’ படத்தோட இடைவேளை சீனை படப்பிடிப்புக்கு முந்தின நாள் ராத்திரிதான் முடிவு செஞ்சாரு. இப்படி ராக்கோழியா வேலை பார்ப்பாரு’ன்னு நீங்கதான் சொன்னீங்க..
இது என்னால முடியாது ஸார்.. உங்ககிட்டேயே என்னால வேலை பார்க்க முடியலை. அவர்கிட்ட சத்தியமா முடியாது ஸார். நான் போக மாட்டேன்’னு உறுதியா சொல்லித் தப்பிச்சிட்டேன்..” என்கிறார் கரு.பழனியப்பன்.