இசையமைப்பாளர் கங்கை அமரனின் மூத்த மகனான வெங்கட் பிரபு, தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குநர்களில் ஒருவராக திகழ்கின்றார். இதுவரை ஆறு திரைப்படங்களை இயக்கியுள்ள அவர், தற்போது விஜய்யை வைத்து “கோட்” படத்தை இயக்கியுள்ளார். செப்டம்பர் 5-ம் தேதி படம் வெளியிடப்படும் சூழலில் தொடர்ந்து அப்டேடுகள் வெளியாகி வருகின்றன.
சென்னை 600028 படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான வெங்கட் பிரபு, இளைஞர்களுக்கான திரைப்படத்தை முதன்முதலில் இயக்கி வெற்றி பெற்றார். இதனால், முதல் படத்திலேயே கவனம் பெற்றார். வெங்கட் பிரபு “மங்காத்தா” மற்றும் “மாநாடு” போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார். மேலும், விஜய் நடித்த “சிவகாசி” படத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில், ரஜினிகாந்தை வைத்து படம் இயக்க கிடைத்த வாய்ப்பு குறித்து வெங்கட் பிரபு நமது டூரிங் டாக்கீஸ் சேனலுக்கு முன்பு பேட்டி அளித்த வீடியோ தற்போது வைரலாகியுள்ளது. அந்த நேர்காணலில், “ரஜினி சாருக்கு நான் ஒரு கதையை கூறினேன், அது அவருக்குப் பிடித்தது. எனவே, அவரை இயக்குவது உறுதியாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன். ஆனால், கடைசி நேரத்தில் அந்த வாய்ப்பை நெல்சன் பெற்றுவிட்டார். அதற்காக எனக்கு வாய்ப்பு மிஸ் ஆனது கஷ்டமாக இருந்தாலும், நெல்சனுக்கு கிடைத்ததில் மகிழ்ச்சி,” என கூறியுள்ளார். கோட் படத்தை முடித்த பின், வெங்கட் பிரபு சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படத்தை இயக்கவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.