ஆர்.எம்.வீரப்பன் எம்ஜிஆரின் வலது கரமாக செயல்பட்டார்.ஜெயலலிதாவின் அமைச்சரவையில் மட்டும் இல்லாமல் ஜானகியின் அமைச்சரவையிலும் அமைச்சராக திறம்பட திகழ்ந்தவர்.அரசியல்வாதியாக மட்டுமின்றி சினிமா தயாரிப்பாளராக மின்னிய ஆர்.எம்.வி நேற்று உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவருக்கு வயது 98.அவர் தயாரித்த திரைப்படங்களில் பாட்ஷாவும் ஒரு மிக முக்கியமான திரைப்படம்.
![](https://touringtalkies.co/wp-content/uploads/2024/04/Screenshot-2024-04-09-145542.jpg)
இவர் புதுக்கோட்டை மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்டவர்.திராவிட இயக்கங்களின் கருத்தியல் ஈர்ப்பால் தன்னை திராவிடத்தோடு இணைத்துக்கொண்டார்.தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் அமைச்சரவையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக விளங்கியவர் அவர். முக்கியமாக எம்ஜிஆரின் வலது கரமாக இருந்தவர். எம்ஜிஆரை பார்க்க வேண்டுமென்றால் முதலில் ஆர்.எம்.வியைத்தான் பார்க்க வேண்டும் என்ற பேச்சு அப்போதைய அரசியல் காலத்தில் இருந்தது.
![](https://touringtalkies.co/wp-content/uploads/2024/04/86055868.jpg)
எம்ஜிஆரின் மறைவுக்கு பிறகு அதிமுக ஜானகி அணி மற்றும் ஜெயலலிதா அணி என இரண்டாக பிரிந்தபோது முதலில் ஜானகி அணியில் இருந்தவர் ஜானகியின் அமைச்சரவையிலும் அமைச்சராக இருந்தார்.பிறகு ஜெயலலிதா அணி அதிமுகவை முழுதாக கைப்பற்றிய பிறகு ஜெயலலிதாவின் அமைச்சரவையிலும் அமைச்சராக இருந்தார். எந்த அணியில் இருந்தாலும் தனதுஅரசியல் ஆளுமையை வலிமையை இழக்காமல் இருந்தார் ஆர்.எம்.வி .இதற்கிடையே எம்ஜிஆர் கழகம் என்ற ஒரு கட்சியையும் அவர் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.
![](https://touringtalkies.co/wp-content/uploads/2024/04/Screenshot-2024-04-09-145414.jpg)
ஆர்.எம்.வீரப்பன் அரசியல்வாதியாக வலம் வந்தது மட்டும் இன்றி சினிமாவிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.எம்ஜிஆர் தனது பெயரில் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியபோது; அதனை நிர்வகிக்கும் பொறுப்பை ஆர்.எம்.வியிடம்தான் வழங்கினார் எம்ஜிஆர். அதனை திறம்பட நிர்வகிக்கவும் செய்தார். அதனால் ஆர்.எம்.வியின் பெயர் சினிமா துறையிலும் ஜொலிக்க ஆரம்பித்தது.எம்ஜிஆர் பிக்சர்ஸில் தொழிலாளியாக இருந்த ஆர்.எம்.வீரப்பன் சத்யா மூவிஸ் நிறுவனத்தை தொடங்கி அதன் மூலம் எம்ஜிஆர், சரோஜா தேவி, நம்பியார் உள்ளிட்டோர் நடித்து 1964ஆம் ஆண்டு வெளியான தெய்வ தாய் படத்தை முதலில் தயாரித்தார். அந்தப் படம் மெகா ஹிட்டானது.
![](https://touringtalkies.co/wp-content/uploads/2024/04/tnm_import_sites_default_files_Annadurai_MGR_RM-Veerappan_090921_1200.jpg)
தொடர்ந்து எம்ஜிஆரை வைத்து நான் ஆணையிட்டால் , காவல்காரன், கண்ணன் என் காதலன், ரிக்ஷாக்காரன் மற்றும் இதயக்கனி உள்ளிட்ட படங்களை தயாரித்தார். இவர் எம்ஜிஆரை வைத்து மட்டும்தான் ஆர்.எம்.வி படங்கள் தயாரிப்பாரா என்று பலமாக கேள்வி எழுந்த பொழுது கமல் ஹாசனை வைத்து காதல் பரிசு, காக்கி சட்டை, மூன்றாம் பிறை உள்ளிட்ட படங்களையும், ரஜினிகாந்த்தை வைத்து ஊர்க்காவலன், ராணுவ வீரன், மூன்று முகம், பாட்ஷா, தங்கமகன் போன்ற படங்களையும் தயாரித்தார்.
![](https://touringtalkies.co/wp-content/uploads/2024/04/221.jpg)
ஆர்.எம்.வி தயாரித்த பெரும்பாலான படங்கள் வெற்றி படங்களாகவே அமைந்தன. அதில் முக்கியமான படம் என்றால் பாட்ஷா தான். பாட்ஷா திரைப்படம் பிரமாண்டமாக வெற்றி பெற்றாலும், அந்த வெற்றி விழாவில் ரஜினியின் பேச்சு சலசலப்பை ஏற்படுத்தியது. அதுமட்டுமின்றி ஆர்.எம்.வி மீது ஜெயலலிதாவின் கோபப்பார்வை விழுவதற்கு காரணமாக அமைந்துவிட்டது என்று பலரும் சொல்வார்கள். ஏனெனில் அந்தப் படத்தின் வெற்றி விழாவில் பேசிய ரஜினிகாந்த், தமிழ்நாட்டில் வெடிகுண்டு கலாசாரம் பெருகிவிட்டது என்று சொல்லிவிட்டார். அப்போது ஆட்சியில் இருந்தது ஜெயலலிதா என்பதால் தான் ஆர்.எம்.வியின் அமைச்சர் பதவி ஜெயலலிதாவால் பறிக்கப்பட்டதாக தகவலும் உண்டு.
வயது முதிர்வு காரணமாக அரசியல் மற்றும் சினிமாவிலிருந்து தள்ளியிருந்தார்.பின்னர் அவரது குடும்பத்திலிருந்து தியாகராஜ சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தை மேம்படுத்தி ஏராளமான படங்களை தயாரித்து வருகிறார் அதில் கடைசியாக தனுஷ் நடிப்பில் வெளியான கேப்டன் மில்லர் திரைப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.