‘சீயான்’ விக்ரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘கோப்ரா’ படத்தின் பாடல்கள் வெளியிட்டு விழா சென்னையில் உள்ள பிரம்மாண்டமான பீனிக்ஸ் சிட்டி வணிக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த பிரத்யேக அரங்கத்தில் நேற்று மாலை நடைபெற்றது.
இந்த விழாவில் படத்தின் தயாரிப்பாளர் எஸ்.எஸ்.லலித் குமார், இயக்குநர் அஜய் ஞானமுத்து, படத்தின் நாயகன் சீயான் விக்ரம், அவரது வாரிசும், நடிகருமான துருவ் விக்ரம், ரெட் ஜெயண்ட் மூவிஸ் உதயநிதி ஸ்டாலின், இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், நடிகர்கள் ஆனந்த்ராஜ், ரோபோ சங்கர், நடிகைகள் ஸ்ரீநிதி ஷெட்டி, மீனாட்சி கோவிந்தராஜன், மிருணாளினி ரவி, நடிகர் ரோஷன் மேத்யூ, கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான், பாடலாசிரியர் தாமரை ஆகியோருடன் படத்திற்கு இசையமைத்த இசையமைப்பாளர் ‘இசைப்புயல்’ ஏ.ஆர்.ரகுமான் உள்ளிட்ட பட குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் ‘கோப்ரா’ படத்தில் இடம் பெற்ற ஐந்து பாடல்களையும், ‘இசைப் புயல்’ ஏ.ஆர்.ரகுமான் மற்றும் அவரது குழுவினர் மேடையில் பாடி, படத்தின் பாடல்களை அறிமுகப்படுத்தி, ரசிகர்களை உற்சாகமடைய செய்தனர்.
இந்த விழாவில் நடிகர் சீயான் விக்ரம் பேசுகையில், ” கடந்த சில தினங்களுக்கு முன் என் இதயத்தில் சின்னதாக ஒரு அசௌகரியமான உணர்வு ஏற்பட்டது. இதற்காக மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று நலமுடன் திரும்பி விட்டேன்.
அதற்குள் சமூக வலைதள பக்கத்தில் விரும்பத்தகாத விசயங்கள் நடந்தன. அதற்காக அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இருப்பினும் எனக்கு நெருக்கமானவர்கள் பலர் பதறி அடித்து விசாரித்தார்கள். நான் ஆரோக்கியமாக இருக்கிறேன். நலமாக இருக்கிறேன். இதற்காகவே இந்த விழாவில் கலந்து கொண்டிருக்கிறேன்.
என்னுடைய ரசிகர்கள், நண்பர்கள் அவர்களின் ஆதரவும், ஆசியும் இருக்கும்வரை எனக்கு எதுவும் நடைபெறாது. எனக்கு 20 வயதில் விபத்து ஏற்பட்டது என்பது அனைவருக்கும் தெரியும். அப்போது என் காலை அகற்ற வேண்டும் என்ற நிலை ஏற்பட்ட போது, மன உறுதியுடன் போராடி, அதிலிருந்து மீண்டிருக்கிறேன். அதனால் தற்போது நடந்தவை எல்லாம் எனக்கு பெரிதாக தெரியவில்லை.
நான் எப்போதும் சினிமாவுக்காகத்தான் இருக்கிறேன். சினிமா மட்டும்தான் என் உயிர். வேறு எதுவும் எனக்குத் தெரியாது. பல ஆண்டுகளுக்கு முன் ‘சோழா டீ’ என்ற ஒரு விளம்பரத்தில் நடித்தேன். அதில் நான் ஒரு சோழ ராஜனாக நடித்தேன். அதற்கு திலீப் என்று ஒரு இளைஞர் இசையமைத்தார்.
ஆனால் இன்று அதே ஆதித்ய கரிகாலனாக, மிகப் பெரும் வரலாற்று காவியமான ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் நடித்திருக்கிறேன். அப்போது திலீப்பாக இருந்தவர், தற்போது ஏ.ஆர்.ரகுமானாக மாறி இரண்டு ஆஸ்கார் விருதுகளை பெற்று இந்தப் படத்துக்கு இசையமைத்திருக்கிறார். நானும் சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற்றிருக்கிறேன்.
சில தருணங்களில் நானும் ஆஸ்கார் விருதைப் பெறவேண்டும் என்று நினைத்திருக்கிறேன் இதற்கு காரணம் ஏ.ஆர்.ரஹ்மான் சார்தான். இங்கிருந்து பணியாற்றினாலும் ஆஸ்காரை வெல்லலாம் என நிரூபித்தவர் அவர்.
இதன் மூலம் நமக்குள் ஒரு கனவு இருந்தால்… ஒரு லட்சியம் இருந்தால்… அதற்காக கடினமாக உழைத்தால்… யாராக இருந்தாலும் மிகப் பெரிய உயரத்தை எட்ட முடியும். நீங்கள் நினைத்துப் பார்க்காத அளவிற்கான எல்லையைத் தொட முடியும். இதற்கு ஏ.ஆர்.ரகுமான் சிறந்த உதாரணம்.
இவர் இந்திய நாட்டின் பெருமை. வாழும் சகாப்தம். லிவிங் லெஜன்ட். அவருடைய இசைக்கு அனைவரையும் போல் நானும் ஒரு ரசிகன். அவர் ‘கோப்ரா’ படத்தில் தன்னுடைய பங்களிப்பை வழங்கியதற்காக, அவருக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
படத்தில் சிக்கலான காட்சி அமைப்புகள், நுட்பமான கதாபாத்திர உணர்வுகள், இதனை ஏ.ஆர்.ரகுமான் அவர்களை தவிர வேறு யாராலும் இசையால் நிறைவடைய செய்ய இயலாது என இயக்குநர் அஜய் ஒவ்வொரு முறையும் என்னிடம் ரகுமானை பற்றி சொல்லிக் கொண்டே இருப்பார்.
தயாரிப்பாளர் லலித் குமார், எனக்கு அற்புதமான இயக்குநரை அறிமுகப்படுத்தி இருக்கிறார். எல்லா நடிகருக்கும் நல்லதொரு கதை அமைய வேண்டும். அதனை இயக்குவதற்கு நல்லதொரு இயக்குநர் மற்றும் குழு வேண்டும். இதனை உருவாக்கி கொடுத்த தயாரிப்பாளர் லலித் குமார் அவர்களுக்கு இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
‘கோப்ரா’ படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ்தான் வெளியிடுகிறது என்றவுடன் எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. வெற்றி உறுதி என்பதால் சந்தோஷமாக இருக்கிறேன். இதற்காக உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இர்ஃபான் பதான் எப்போதும் எனக்கு ஹீரோதான். அவர் பெஸ்ட் ஆல் ரவுண்டர். இந்தப் படத்திலும் ஏராளமான சிக்ஸர்களை அடித்திருக்கிறார். மலையாள நடிகர் ரோஷன் மேத்யூ இந்த படத்தில் வித்தியாசமான வில்லன் வேடத்தில் நடித்திருக்கிறார்.
ஆனந்த்ராஜ், கே.எஸ்.ரவிக்குமார், மீனாட்சி கோவிந்தராஜன், மிருணாளினி ரவி, ரோபோ சங்கர் என ஏராளமான நட்சத்திரங்களுடன் பணியாற்றியது மறக்க இயலாத மகிழ்வான அனுபவம்.
இந்த விழாவிற்கு வருகை தந்திருக்கும் துருவ் விக்ரம் அவர்களுக்கு நன்றி. ‘மகான்’ படத்தில் நன்றாக நடித்திருந்தீர்கள். அதற்காக உங்களது தந்தை பெருமை கொள்வார் என நினைக்கிறேன்.
இயக்குநர் அஜய் சிறந்த படைப்பாளி. கற்பனை திறனில் அவருக்கு நிகர் அவரேதான். அவருடைய ‘டிமான்டி காலனி’, ‘இமைக்கா நொடிகள்’, ‘கோப்ரா’ என ஒவ்வொரு படமும் ஒவ்வொரு ஜானர். அவர் இயக்கவிருக்கும் அடுத்த படத்தின் கதையும் எனக்குத் தெரியும். அதுவும் வேறு ஜானர். சிறப்பாக இருக்கிறது. அஜய் தொடர்ந்து கடினமாக உழைக்கும் உழைப்பாளி. அவருடைய கடின உழைப்பிற்கும், பேரன்பிற்கும் இந்த படம் மிகப் பெரிய வெற்றியைப் பெறும்.
நான் முதன்முதலாக ஏற்றிருக்கும் சிக்கலான கதாபாத்திரம் இது. படத்தில் ஏழு கேரக்டர்கள் இருந்தாலும், ஒவ்வொன்றுக்கும் பின்னணி பேசுவதில் வித்தியாசம் காட்ட வேண்டும் என இயக்குநரின் வேண்டுகோளை ஏற்று, நிறைய மெனக்கடல் இருந்தது.
இது கதாபாத்திரங்களைப் பற்றிய கதை கிடையாது. முழுக்க முழுக்க எமோஷனலை அடிப்படையாகக் கொண்டு உருவான கதை. ஒவ்வொரு காட்சியையும், ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் நுட்பமாக செதுக்கியிருக்கிறார். இதற்காகவே மிகப் பெரிய வெற்றியை பெற வேண்டும்.
ரசிகர்களின் அன்பும், ஆதரவும் இருக்கும்வரை எனக்கு எல்லாமே வெற்றியாகத்தான் அமையும். ரசிகர்கள் காட்டும் பேரன்பிற்கு பதிலளிக்க என்னிடம் வார்த்தை இல்லை. நீங்கள் இல்லையென்றால் நான் இல்லை..” என்றார் நடிகர் விக்ரம்.