Friday, April 12, 2024

‘பிக்பாஸ் ஜோடிகள்’ நிகழ்ச்சியில் இருந்து விலகினார் வனிதா விஜயகுமார்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

‘பிக் பாஸ் ஜோடிகள்’ நிகழ்ச்சியிலிருந்து அதிரடியாக வெளியேறியிருக்கிறார் நடிகை வனிதா விஜயகுமார்.

சமீபகாலமாக மீடியா உலகத்தில் பரபரப்பு நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை வனிதா விஜயகுமார் இன்றைக்கு ஒரு பரபரப்பைக் கிளப்பியிருக்கிறார்.

தான் அவமானப்படுத்தப்பட்டதாலும், மோசமாக நடத்தப்பட்டதாலும் விஜய் தொலைக்காட்சி நடத்தும் பிக்பாஸ் ஜோடிகள்’ நிகழ்ச்சியில் இருந்து தான் வெளியேறிவிட்டதாக அறிவித்திருக்கிறார் வனிதா விஜயகுமார்.

விஜய் தொலைக்காட்சியில் தொடர்ச்சியாக பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கெடுத்து வருகிறார் வனிதா விஜயகுமார். பிக் பாஸ் சீசன்-3’, ‘குக் வித் கோமாளி சீசன்-1’, ‘கலக்கப் போவது யாரு’ ஆகிய நிகழ்ச்சிகளில் வனிதா விஜயகுமார் பங்கெடுத்துள்ளார்.

தற்போது இதே தொலைக்காட்சி நடத்தி வரும் ‘பிக் பாஸ் ஜோடிகள்’ நிகழ்ச்சியிலும் வனிதா விஜயகுமார் கலந்து கொண்டிருக்கிறார்.

பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆண், பெண் போட்டியாளர்களை ஜோடியாக்கி அவர்களிடையே “யார் சிறந்த ஜோடி..?” என்று தேர்வு செய்யும்விதமாக இந்த நிகழ்ச்சி தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சி தற்போதுதான் ஞாயிறுதோறும் ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த நிகழ்ச்சியில் சுரேஷூக்கு ஜோடியாக வனிதா விஜயகுமார் ஆடி வருகிறார். சமீபத்தில் ‘காளி’ வேடமிட்டு ஆடியதற்கு மிகப் பெரிய பாராட்டுக்களைப் பெற்றார் வனிதா விஜயகுமார்.

ஆனால், தற்போது அந்த ‘பிக் பாஸ் ஜோடிகள்’ நிகழ்ச்சியிலிருந்து தான் விலகுவதாக வனிதா விஜயகுமார் அறிவித்துள்ளார். இது தொடர்பாக வனிதா விஜயகுமார் இன்றைக்கு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில்,  “பிக்பாஸ் ஜோடிகள்’ நிகழ்ச்சியில் எனது ‘காளி’ அவதாரத்துக்குப் பாராட்டுகளுக்கும், ஆதரவும் தந்த ஊடகங்கள், மற்றும் என் ரசிகர்கள், என் நலம் விரும்பிகளுக்கும் இந்த நேரத்தில் நன்றி கூறிக் கொள்கிறேன்.

‘பிக்பாஸ் ஜோடிகள்’ நிகழ்ச்சியை விட்டு நான் வெளிநடப்பு செய்யும் முன், நான் உருவாக்கிய தாக்கத்தை நீங்கள் பார்க்க வேண்டும் என்று விரும்பினேன்.

ஒருவர் கொடுமைப்படுத்துவதை, துன்புறுத்துவதை நான் என்றுமே ஏற்க மாட்டேன். அது யாராக இருந்தாலும், என் குடும்பத்தினராக இருந்தாலும் சரி. இது இந்த உலகுக்கே தெரியும்.

‘பிக் பாஸ்-3’ நிகழ்ச்சியிலிருந்தே விஜய் டிவி எனது குடும்பமாகிவிட்டது. ‘குக் வித் கோமாளி’, ‘கலக்கப் போவது யாரு..’ என்று மேலும் அவர்களது பல நிகழ்ச்சிகளில் சிறப்பு பங்கேற்பாளர் என்று முறையில் அவர்களோடு நான் தொடர்ந்து பணியாற்றி வருகிறேன்.

எங்களுக்குள் பரஸ்பர மரியாதை உண்டு. அது எப்போதுமே நீடிக்கும். ஆனால் பணி செய்யும் இடத்தில் தொழில் முறை அல்லாது, நெறிமுறையற்ற நடத்தையை ஏற்கவே முடியாது.

வேலை செய்யும் இடத்தில் பெண்களை, ஆண்கள் மட்டும் மோசமாக நடத்துவதில்லை. பெண்களும் அதைவிட மோசமாக நடத்துகின்றனர். பொறாமை கொள்கின்றனர். நமக்கு வரும் வாய்ப்புகளை நாசமாக்க முயற்சிக்கின்றனர்.

இங்கே, இப்போது ஒரு மோசமான நபரால் நான் துன்புறுத்தப்பட்டேன். அவமானப்படுத்தப்பட்டேன். மோசமாக நடத்தப்பட்டேன். அவரது திமிர் காரணமாக… அவரால் எனது தொழில் வளர்ச்சியை ஏற்க முடியவில்லை என்பதே இதற்குக் காரணம்.

உங்களைவிட எல்லா விதத்திலும் மூத்த நபர், கடுமையாக உழைத்து முன்னேறியவர். முன்னேறக் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் இளைஞர்களைக் கீழ்மையாகப் பார்ப்பதும், அவர்களது ஊக்கத்தைக் கெடுத்து அவமானப்படுத்துவதையும் பார்க்க வேதனையாக இருக்கிறது.

குறிப்பாக நீண்ட போராட்டத்துக்குப் பின், குடும்பத்தினரின், கணவரின் ஆதரவு இல்லாமல் சாதிக்கும், வெற்றி காணும், 3 குழந்தைகளின் தாயை இப்படி நடத்துகிறார். பெண்கள், சக பெண்களுக்கு ஆதரவாக நிற்க வேண்டும். மாறாக அவர்களின் வாழ்க்கையை மோசமாக மாற்றக் கூடாது.

பிக்பாஸ் ஜோடிகள்’ நிகழ்ச்சியிலிருந்து விடை பெறுவதில் எனக்குப் பெரும் வருத்தம்தான். மற்ற அத்தனை போட்டியாளர்களுக்கும் எனது வாழ்த்துகள்.

வெற்றி மட்டுமே முக்கியமல்ல. போட்டியில் பங்கேற்று, சவாலை ஏற்பதே மிக முக்கியம்.

சுரேஷ் சக்ரவர்த்தி, என்னை மன்னித்துவிடுங்கள். எனக்கு எது சரியோ அதை நான் செய்தாக வேண்டும். என்னால், நீங்களும் இந்த நிகழ்ச்சியை விட்டு விலக வேண்டியதாகிவிட்டது. ஆனால், எனது முடிவுக்கு ஆதரவு கொடுத்த நீங்கள்தான் எனது உண்மையான நண்பர்…” – இவ்வாறு அந்த அறிக்கையில் வனிதா விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

ஒரு பெண்தான் தன்னை அவமானப்படுத்திவிட்டார் என்று வனிதா விஜயகுமார் சொல்வதையும், முன்னேறுபவர்களை ஊக்கப்படுத்த வேண்டும் என்று அவர் சொல்வதையும் வைத்துப் பார்த்தால் வனிதா விஜயகுமார் சண்டையிட்டது அந்த நிகழ்ச்சியின் நடுவராக இருக்கும் ரம்யா கிருஷ்ணனுடன் இருக்கலாம் என்று மீடியா உலகம் கருதுகிறது.

அதே சமயம் இது ஒரு செட்டப்பான நாடகம் என்றும் சிலர் சொல்கிறார்கள். விஜய் டிவியும், வனிதா விஜயகுமாரும் சேர்ந்து நிகழ்ச்சியின் டி.ஆர்.பி.யை அதிகப்படுத்துவதற்காக இந்த டிராமாவை ஆடுகிறார்கள் என்று சொல்கிறார்கள்.

விஜய் டிவி தரப்பில் இது குறித்து விசாரித்தபோது “எலிமினேட் செக்ஷனில் சுரேஷ் சக்கரவர்த்தி-வனிதா விஜயகுமார் ஜோடி தோல்வியடைந்து போட்டியில் இருந்து நீக்கப்பட்டுவிட்டார்கள். தான் நீக்கப்பட்டதைத் தாங்க முடியாமல்தான் வனிதா விஜயகுமார் இப்படி பேசுகிறார்…” என்கிறார்கள்.

ஆனாலும், இந்த வார ஞாயிற்றுக்கிழமை எபிசோடுக்கு டி.ஆர்.பி.யைக் கூட்டுவதற்காக வனிதா மற்றும் விஜய் டிவி இரு தரப்பினரின் சதி வேலைதான் இது என்று டிவி வட்டாரங்கள் அடித்துச் சொல்கின்றன…!

- Advertisement -

Read more

Local News