Friday, April 12, 2024

“தமிழ் ரசிகர்கள் தனித்துவமானவர்கள்” – நெகிழ்ந்த ‘பனாரஸ்’ பட இயக்குநர்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

கன்னட திரையுலகின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான ஜெய தீர்த்தா இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘பனாரஸ்’.

காதலை மையப்படுத்தி உருவாகி இருக்கும் இந்த படத்தை என்.கே.புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் திலகராஜ் பல்லால் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறார்.

இந்தப் படத்தில் புதுமுக நடிகர் ஜையீத் கான் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை சோனல் மோன்டோரியோ நடித்திருக்கிறார்.

இவர்களுடன் மூத்த கன்னட நடிகரான தேவராஜ், அச்சுத்குமார், சுஜய் சாஸ்திரி, பரக்கத் அலி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

அத்வைதா குருமூர்த்தி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்திற்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைத்திருக்கிறார்.

இந்த ‘பனாரஸ்’ திரைப்படம் கன்னடத்தில் மட்டுமல்லாமல், தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி மொழியிலும் வெளியாகிறது.

இந்த ‘பனாரஸ்’ படத்தில் இடம் பெற்ற ‘மாய கங்கா..’ எனத் தொடங்கும் முதல் பாடலின் வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இந்த விழாவில், ‘பனாரஸ்’ படத்தின் தயாரிப்பாளர் திலக்ராஜ் பல்லால், இயக்குநர் ஜெய தீர்த்தா, நடிகர் சுஜய் சாஸ்திரி, கதாநாயகன் ஜையீத் கான், கதாநாயகி சோனல் மோன்டோரியோ ஆகியோருடன், தமிழ் திரையுலகின் மூத்த தயாரிப்பாளரும், நடிகர் விஷாலின் தந்தையுமான ஜி.கே.ரெட்டி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பாடலை வெளியிட்டு சிறப்பித்தார்.

இவ்விழாவில் இயக்குநர் ஜெய தீர்த்தா பேசுகையில், ”நான் யாரிடமும் உதவியாளராகப் பணியாற்றவில்லை. வீதியோர நாடகக் கலைஞனாக எனது கலைப் பயணத்தைத் தொடங்கி, தற்போது படங்களை இயக்கி வருகிறேன்.

இந்த பனாரஸ் படத்திற்கு முன்பாக கன்னடத்தில் ஏழு திரைப்படங்களை இயக்கி இருக்கிறேன். என்னுடைய இயக்கத்தில் வெளியான ‘பெல்பாட்டம்’ படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் கிருஷ்ணாவின் நடிப்பில் இயக்குநர் சத்யசிவாவின் இயக்கத்தில் உருவாகி வருகிறது.  

என்னுடைய இயக்கத்தில் தயாரான ஏழு படங்களில், ஐந்து படங்களில் புதுமுகங்களை அறிமுகப்படுத்தியிருக்கிறேன். இந்த ’பனாரஸ்’ படத்திலும் நடிகர் ஜையீத் கானை கதாநாயகனாக அறிமுகம் செய்திருக்கிறேன்.

இந்த ‘பனாரஸ்’ படத்தை காசியை பின்னணியாக கொண்டு காதல் கதையில் உருவாக்கி இருக்கிறேன். இந்தப் படத்தில் காதல் என்பது அழகை பார்த்து வருவதில்லை. இதயப்பூர்வமாகவும், ஆத்மார்த்தமாகவும்தான் காதல் உண்டாகிறது என்பதனை, மர்மங்கள் நிறைந்த காசியை கதைக் களமாகக் கொண்டு திரைக்கதையை அமைத்திருக்கிறேன்.

இதன் பின்னணியிலும் ஒரு சுவாரசியம் இருக்கிறது. திரைப்பட படைப்புகளுக்கு மொழி பேதம் இல்லை. என்னுடைய இயக்கத்தில் வெளியான முதல் படம் தமிழ் ரசிகர்களின் முன்னிலையில்தான் விருதினை பெற்றது.

அந்த வகையில் சிறந்த திறமையாளர்களை கண்டறிந்து ஊக்குவிப்பதில் தமிழ் ரசிகர்கள் தனித்துவமானவர்கள். இதற்காக நான் பெருமிதம் அடைகிறேன். இந்த ‘பனாரஸ்’ திரைப்படம் தமிழிலும் வெளியாவதை பாக்கியமாக கருதி, உங்களின் ஆதரவை கேட்கிறேன்.

இந்தப் படத்தில் இடம் பெற்ற பாடல்களை தமிழில் பாடலாசிரியர் பழனி பாரதி எழுதியிருக்கிறார். இன்று வெளியிடப்பட்டிருக்கும் ‘மாய கங்கா.. ’என்ற பாடலையும் அவரே எழுதியிருக்கிறார்.

இந்த ‘பனாரஸ்’ படத்தின் தமிழ் பதிப்புக்கான வசனங்களை காமராசன் எழுதியிருக்கிறார். ஒத்துழைப்பு வழங்கிய ஒளிப்பதிவாளர் அத்வைதா, இசையமைப்பாளர் அஜனீஸ் உள்ளிட்ட படக் குழுவினருக்கு இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார்.

நாயகன் ஜையீத் கான் பேசுகையில், ”இந்த பனாரஸ்’ படத்தின் சிங்கிள் ட்ராக்கை வெளியிட வந்திருக்கும் சிறப்பு விருந்தினரான தயாரிப்பாளர் ஜி.கே.ரெட்டி அவர்களுக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

படத்தின் தயாரிப்பாளரும், என்னுடைய தந்தையும் பால்ய கால நண்பர்கள். நான் நடிகனாக வேண்டும் என்று தீர்மானித்தவுடன் முதலில் எதிர்ப்பு தெரிவித்த என்னுடைய பெற்றோர்களை, தயாரிப்பாளர் திலக்ராஜ்தான் சமாதானம் சொல்லி, நடிப்பு பயிற்சி கல்லூரிக்கு என்னை அனுப்பி வைத்தார்.

அங்கு நடிப்புடன் நடனம், சண்டைக் காட்சிகளையும் கற்றுக் கொண்டேன். இந்த ‘பனாரஸ்’ படத்தை படத்தின் கதை இந்திய ரசிகர்களுக்கு ஏற்றது. என்னுடைய முதல் படமே பான் இந்திய’ அளவில் வெளியாகவிருப்பது எனக்கு இன்ப அதிர்ச்சியாக உள்ளது.

படக் குழுவினர் அனைவரும் பொறுப்பை உணர்ந்து கடினமாக பணியாற்றியிருக்கிறோம். இதற்காக தயாரிப்பாளர் மற்றும் படக் குழுவினருக்கு இந்தத் தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

காசியில் பிணங்கள் எரிந்து கொண்டிருக்கும் சூழலில், கதாநாயகியுடன் காதல் காட்சிகளில் நடித்தது சவாலாக இருந்தது. காசி புதிரும், மர்மங்களும் நிறைந்த நகரம். அதனால் இந்தப் பாடல் காட்சியில் என்னுடைய நடிப்பு நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன். நீங்கள்தான் பார்த்துவிட்டு விமர்சிக்க வேண்டும்.

‘பனாரஸ்’ படத்தின் தெலுங்கு பதிப்பை ‘புஷ்பா’ பட புகழ் இயக்குநர் சுகுமார் வெளியிட்டார். ஹைதராபாத்திலும் ‘பனாரஸ்’ படக் குழுவினருக்கு பெரிய வரவேற்பு கிடைத்தது. தமிழிலும் ‘பனாரஸ்’ படக் குழுவினருக்கு பேராதரவு கிடைக்கும் என நம்புகிறேன்…” என்றார்.

- Advertisement -

Read more

Local News