Friday, April 12, 2024

ஆஸ்கர் போட்டியில் பங்கேற்கிறது சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ திரைப்படம்..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இந்தியத் திரையுலகினர் மத்தியில் கொண்டாடப்பட்ட படம் ‘சூரரைப் போற்று’. சூர்யாவின் அசுரத்தமான நடிப்பு, நாயகியான அபர்ணா பாலமுரளியின் யதார்த்தமான நடிப்பு, இயக்குநர் சுதா கொங்கராவின் துல்லியமான இயக்கம், ஜி.வி.பிரகாஷின் ஆர்ப்பரிக்கும் இசை, நிக்கத் பொம்மியின் சுத்தமான ஒளிப்பதிவு என அனைத்து பிரிவுகளிலும் பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தியது.

கடந்த ஆண்டு ஓடிடி தளத்தில் வெளியான படங்களில் அதிகம் பேரால் பார்க்கப்பட்ட தமிழ்ப் படம் என்ற அபார சாதனையை இந்த சூரரைப் போற்று’ திரைப்படம் படைத்திருந்தது.

தற்போது ‘சூரரைப் போற்று’ படக் குழுவினரின் அபாரமான உழைப்புக்கு மேலும் பெருமைச் சேர்க்கும் வகையில் இத்திரைப்படம் ஆஸ்கர் போட்டியிலும் களமிறங்கியுள்ளது.

இந்த முறை கரோனா அச்சுறுத்தலால் ஆஸ்கர் போட்டி விதிமுறைகளில் பல மாற்றங்களைச் செய்துள்ளனர். ஓடிடி தளங்களில் வெளியான படங்களும்கூட ஆஸ்கர் போட்டியில் பங்கேற்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வரிசையில் ஆஸ்கர் போட்டியின் பொதுப் பிரிவில் ‘சூரரைப் போற்று’ திரைப்படம் சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இயக்குநர், சிறந்த இசையமைப்பாளர், சிறந்த கதாசிரியர் உள்ளிட்ட அனைத்துப் பிரிவுகளிலும் போட்டியிடுகிறது.

இந்தப் போட்டியில் தேர்வாகி பரிந்துரை பட்டியலில் இடம் பெற்றால், அடுத்தக் கட்டமாக இறுதித் தேர்வுப் போட்டி பட்டியலிலும் இந்தப் படம் இடம் பெறும். அதனைத் தொடர்ந்து யார் வெற்றியாளர் என்பதை ஆஸ்கர் மேடையில் அறிவிப்பார்கள்.

தற்போது இந்தப் பொதுப் பிரிவுப் போட்டியில் திரையிடலுக்காக அகாடமி திரையிடல் அறையில் சூரரைப் போற்று’ திரைப்படம் அப்லோட் செய்யப்பட்டுள்ளது.

இந்த அறையில் உள்ள படத்தை ஆஸ்கர் குழு உறுப்பினர்கள் பலரும் பார்த்து எந்தெந்த பிரிவில் இந்தப் படத்தைத் தேர்வு செய்யலாம் என்பதை முடிவு செய்வார்கள்.

“உலகத் திரையுலகினரின் பாராட்டுகளை அள்ளிய ‘சூரரைப் போற்று’ திரைப்படம், ஆஸ்கர் குழு உறுப்பினர்களின் பாராட்டுகளையும் அள்ளும் என்பதில் படக் குழுவினர் மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளனர்…” என்று கூறினார் படத்தின் இணை தயாரிப்பாளரான இராஜசேகர் கற்பூர சுந்தரபாண்டியன்.

- Advertisement -

Read more

Local News