பாலிவுட்டின் முன்னணி நடிகர் பாபி தியோல். ரன்பீர் கபூர் நடிப்பில் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் ‘அனிமல்’ படத்தில் வில்லன் கதாபாத்திரம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர்.. அடுத்ததாக சூர்யாவின் ‘கங்குவா’ படத்தில் நடித்து வருகிறார். இந்த தகவலை அவரே சமீபத்திய நேர்காணலில் பகிர்ந்து கொண்டார். அதில் அவர், “சூர்யா ஓர் அற்புதமான அர்ப்பணிப்புள்ள நடிகர். அவருடன் பணியாற்றுவது சிறப்பான அனுபவம்.
கங்குவா படத்தில் நான் நடித்து வரும் கதாபாத்திரம் என்னுடைய வழக்கமான கதாபாத்திரத்திலிருந்து வேறுபட்டது. எனக்கு தமிழ் தெரியாது. அதனால்தான் சொல்கிறேன்,இது எனக்கு முற்றிலும் மாறுப்பட்ட அனுபவம். என்னால் ஓரிரெண்டு மாதங்களில் தமிழை கற்றுக்கொள்ள முடியவில்லை. இயக்குநர் சிவா பழகுவதற்கு இனிமையானவர்” என்றார்.
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம், ‘கங்குவா’. இதில் திஷா பதானி, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உட்படப் பலர் நடிக்கின்றனர். பீரியட் படமான இதை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் யுவி கிரியேஷன்ஸ் உடன் இணைந்து தயாரிக்கிறது. வெற்றி பழனிசாமி ஒளிப்பதிவு செய்கிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். 3டியில் உருவாகும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட 10 மொழிகளில் வெளியாக இருக்கிறது.