‘கைதி’, ’மாஸ்டர்’,’விக்ரம்’ படங்களில் வில்லனாக நடித்த அர்ஜுன் தாஸ் ‘அநீதி’ படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். இந்தப் படத்தை அடுத்து சாந்தகுமார் இயக்கும் ‘ரசவாதி’ படத்தில் ஹீரோவாக நடிக்கும் அவர், மீண்டும் ஒரு படத்தில் நாயகனாக நடிக்கிறார்.
இதை விஷால் வெங்கட் இயக்குகிறார். இவர் ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’என்ற படத்தை இயக்கியவர்.
இதில் ஷிவாத்மிகா ராஜசேகர் நாயகியாக நடிக்கிறார். நாசர், காளி வெங்கட், அபிராமி, ரமேஷ் திலக், பால சரவணன் உட்பட பலர் நடிக்கின்றனர். டி.இமான் இசை அமைக்கிறார். பி.எம்.ராஜ்குமார் ஒளிப்பதிவு செய்கிறார்.
படம் பற்றி விஷால் வெங்கட் கூறும்போது, “மலையடிவாரத்தில் நடக்கும் கதையை கொண்ட படம். இதுவரை ஏற்காத பாத்திரத்தில் அர்ஜுன் தாஸ் நடிக்கிறார். ஷிவாத்மிகா, காளி வெங்கட்டின் தங்கையாக நடிக்கிறார். ‘நித்தம் ஒரு வானம்’ படத்தில் ஷிவாத்மிகா சிறப்பாக நடித்திருந்தார். இந்த கேரக்டருக்கு பொருத்தமாக இருந்ததால் அவரை தேர்வு செய்தோம். வரும் 30-ம் தேதி படப்பிடிப்பு தொடங்குகிறது” என்றார்.