Thursday, April 11, 2024

சீதா ராமம் – சினிமா விமர்சனம்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

‘ஓகே கண்மணி’ படத்திற்குப் பிறகு பெருமைப்படும் அளவுக்கு வந்திருக்கும் காதல் படம் இது. படத்தின் கதை 1964 மற்றும் 1980-களில் நடப்பதுபோல எழுதப்பட்டுள்ளது.

தனக்கென்று சொல்லிக் கொள்ள ஒரு உறவு வேண்டும் என்று ஏங்கும் ராம் என்ற கள்ளங்கபடம் இல்லாத இந்திய ராணுவ வீரரின் காதல் கதையும், அவரது தேசப் பற்றும் சேர்ந்த படம் இது.

பாகிஸ்தானிய பெண்ணான அப்ரீனா என்னும் ராஷ்மிகா தீவிரமான இந்திய எதிர்ப்பாளர். லண்டனில் இந்தியத் தூதரின் காரை பெட்ரோல் ஊற்றி எரிக்கும் அளவுக்கு வெறுப்பாளர்.

ஆனால் பாகிஸ்தான் ராணுவத்தில் உயரதிகாரியாக இருந்த தனது தாத்தாவின் சொத்துக்கள் தனக்குக் கிடைக்க வேண்டுமெனில் தாத்தாவின் கடைசி வேண்டுகோளை அப்ரீனா நிறைவேற்றியே ஆக வேண்டும் என்ற கட்டாயம் ஏற்படுகிறது.

“ராம்’ என்ற இந்திய ராணுவ லெப்டினென்ட் தனது காதலியான ‘சீதா மகாலட்சுமி’க்கு 20 வருடங்களுக்கு முன்பாக எழுதிய கடிதத்தை, அப்ரீனா பத்திரமாக அந்த சீதாவிடம் கொண்டு போய்ச் சேர்த்தால்தான் எனது சொத்துக்களை அப்ரீனாவுக்கு அளிக்க வேண்டும்…” என்ற நிபந்தனையை தாத்தா சேர்த்துவிட்டதால் அந்தக் கடிதத்தைச் சேர்ப்பிக்க சீதாவைத் தேடி இந்தியாவுக்குள் வருகிறார் அப்ரீனா.

இந்தியாவில் ‘சீதா’ என்ற பெயர் மட்டுமே தெரியும். ஆள் யாரென தெரியாது. புகைப்படமும் இல்லை. ஹைதராபாத்தில் தற்போது மகளிர் கல்லூரியாக இருக்கும் ஒகு பழைய அரண்மனையை முகவரியாகக் கொண்ட அந்த கடிதத்தைச் சேர்ப்பிக்க தனது நண்பன் ஒருவனுடன் சேர்ந்து அலைந்து திரிகிறார் அப்ரீனா. அந்தக் கடிதம் சேர்ப்பிக்கப்பட்டதா..? இல்லையா..? என்பதுதான் இந்தப் படத்தின் சுவையான திரைக்கதை.

ராம் தொடர்புடைய ஒவ்வொருவரிடமும் அப்ரீனா விசாரிக்க, விசாரிக்க ராம் பற்றிய கதை திரையில் விரிகிறது.

குடும்பமே இல்லாமல் தனக்கென்று உறவுகளும் இல்லாமல் ராணுவத்தில் லெப்டினென்டாக காஷ்மீரில் பணியில் இருக்கிறான் ராம். ராணுவத்தில் ஒரு சேவை செய்தமைக்காக நாடு முழுவதும் அவனை கொண்டாடுகிறது. பாராட்டுகிறது. அவனைப் பாராட்டி கடிதங்களாக எழுதிக் குவிக்கிறார்கள்.

அப்போது ஹைதராபாத்தில் இருந்து சீதா மகாலட்சுமி’ என்ற பெயரிலும் ஒரு கடிதம் ராமுக்கு வருகிறது. அதிலிருக்கும் வார்த்தைகளும், சொல்கின்ற விஷயமும் ராமின் மனதுக்குள் காதலை வளர்த்தெடுக்கிறது. கொஞ்சம், கொஞ்சமாக மனதுக்குள் அந்த சீதாவுடன் திருமணம் செய்து டூயட்டே பாடுகிறான் ராம்.

திடீரென்று ஒரு மாத விடுப்பு எடுத்துக் கொண்டு ஹைதராபாத் வரும் ராம், அந்த சீதா மகாலட்சுமியை கண்டறிகிறான். காதலையும் வளர்க்கிறான். சீதாவோ வெளிப்படையாக காதலைச் சொல்ல முடியாமல் தவிக்கிறாள்.

நிஜத்தில் ஹைதராபாத்தின் நிஜாம் குடும்பத்தின் இளவரசியான இந்த சீதா’ என்னும் ‘நூர்ஜஹான்’ ராமுடன் இணைவது சாத்தியமில்லாமல் இருக்கிறது. ஆனால் தான் காதலிக்கும் பெண்தான் ஹைதராபாத்தின் இளவரசி என்பது தெரியாமலேயே ராமும் தன் காதலில் உறுதியாய் இருக்க.. இறுதியில் என்னவாகிறது என்பதுதான் இந்தக் காதல் காவியத்தின் திரைக்கதை.

இன்னும் ஆழமாகக் கதையைச் சொல்லிவிட்டால் படம் பார்க்கவிருக்கும் ரசிகர்களுக்கு சுவாரஸ்யம் குன்றிவிடும் என்பதால் இத்தோடு முடித்துக் கொள்வோம்.

ராமாக துல்கர் சல்மான், சீதாவாக மிருணாள் தாக்கூர், அஃப்ரினாக ராஷ்மிகா மந்தனா ஆகியோர் சிறப்பான தேர்வுதான். மலையாளம், இந்தி, தெலுங்குலகம் என்று மும்மொழிகளிலும் படத்தைப் பேசப்பட வைக்கும் யுக்தியாக இவர்களைத் தேர்வு செய்திருக்கிறார்கள். பாராட்டுக்கள்.

ராமாக நடித்திருக்கும் துல்கர் தான் ஒரு காதல் இளவரசன்’ என்பதை இந்தப் படத்திலும் நிரூபித்திருக்கிறார். காதல் காட்சிகளில் காதலியாக நடிப்பவர்கள் நிஜமாகவே காதலித்துவிடும் அளவுக்கு அவரது நடிப்பில் ஒரு உண்மைத் தன்மை தெரிகிறது.

காதலிக்க வரும் இளைஞர்களின் அந்தத் துடிப்பு, துள்ளல், எதையும் யோசிக்காத தன்மை, காதலைத் தவிர மற்றவைகளைப் பின் தள்ளுவது.. என்று பல்வேறு காதல் சம்பந்தப்பட்ட கெமிஸ்ட்ரி கணக்குகளை கச்சிதமாகச் செய்திருக்கிறார் துல்கர். அவரது அழகான முகமும், நிமிடத்துக்கு நிமிடம் அவர் காட்டும் நவரச  நடிப்பும் ஆண்களையும் கவர்ந்திழுக்கிறது.

அதே சமயம் ராணுவம் சம்பந்தப்பட்ட காட்சிகளில் அதே ராணுவ மிடுக்குடன் நடித்திருக்கிறார் துல்கர். எதிரிகளிடம் ராணுவ ரகசியங்களை சொல்ல வேண்டாம் என்று அவர் போடும் கூப்பாடும் “இந்த நடிப்பு போதும்டா சாமி” என்றுதான் சொல்ல வைக்கிறது.

சீதாவைப் பார்த்தவுடன் அவர் படும் பரவசமும், அந்த நாயகியுடன் இருக்கத் துடிக்கும் காதல் பேச்சுக்களும், கல்யாணம்வரைக்கும் அவசரமாக நிச்சயம் செய்யும் அந்தத் துடிப்பையும் பார்த்தால், இன்றைய இளைஞர்களுக்கு துல்கர் சல்மான் நிச்சயமாக ஒரு ஜெமினி கணேசன்தான்.. கமல்ஹாசன்தான்..!

சீதாவாக நடித்திருக்கும் மிருணாள் தாகூர் சிறந்த தேர்வு. வட்டமயமான முகத்தில் அவர் காட்டும் நடிப்பும், சின்னச் சின்ன ஆக்சன்களுமே அவரைப் பெரிதும் கவர வைக்கின்றன. தன் காதல் தோற்குமா, ஜெயிக்குமா என்கிற குழப்பத்தில் அவர் படும் அவஸ்தையும், இறுதியில் காதலரைத் தேடி வரும் காட்சியில் அந்த ஒரேயொரு அணைப்பிலும் “அப்பாடா” என்று நமக்கும் ஒரு நிம்மதியைத் தருகிறது.

கெளதம் மேனனிடமும், பிரகாஷ் ராஜிடமும் “ராம் எங்கே..?” என்று கேட்டு ஆவேசப்படும் காட்சியிலும் நடிப்பில் ஸ்கோர் செய்திருக்கிறார் மிருணாள்.

அப்ரீனாக வேண்டாவெறுப்பாக இந்த வேலைக்குள் இறங்கும் ராஷ்மிகா போகப் போக இந்தக் காதல் கதைக்குள் தானும் ஐக்கியமாகி எப்படியாவது அந்த சீதா மகாலட்சுமியைப் பார்த்தே தீர வேண்டும் என்று துடிக்கும் அளவுக்கு கதையும், திரைக்கதையும் அவரை இழுக்க.. அந்த பரிதவிப்பு நடிப்பை மிக அழகாக காண்பித்திருக்கிறார்.

வெண்ணிலா கிஷோர், முரளி சர்மா இருவரும் திரைக்கதை தொய்ந்து போகாமல் இருக்க பெரிதும் உதவியிருக்கிறார்கள். இவர்களுக்கான தமிழ் வசனம் எழுதிய மதன் கார்க்கியின் தமிழுக்கு நமது பாராட்டுக்கள்.

கவுதம் மேனன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பிற நடிகர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாப்பாத்திரங்களுக்கேற்ற நடிப்பைக் காண்பித்திருக்கிறார்கள்.  

படத்தின் மிகப் பெரிய பலமே P.S.வினோத்தின் ஒளிப்பதிவுதான். காஷ்மீர், ஹைதராபாத், பாகிஸ்தான் என்று கேமிரா செல்லும் அத்தனை இடங்களிலும் கண்கவர் காட்சிகள்தான் கண்ணுக்குத் தெரிகிறது.

காட்சிக்குக் காட்சி ஓவியமாக படைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர். காஷ்மீரின் இயற்கை அழகை அப்படியே  காட்சிப்படுத்தியிருக்கிறார். டூயட் காட்சிகளின் மாண்டேஜ் ஷாட்களில் காதல் உணர்வைத் தூண்டும்வகையிலான காட்சிகளை வைத்து அதனையும் அற்புதமான லைட்டிங்கில் படமாக்கியிருக்கிறார்.

இரண்டாவதாக பாராட்டுக்குரியவர் கலை இயக்குநர். 1964-ம் வருடம், மற்றும் 1980-ம் வருடத்திற்கேற்ப சம்பந்தப்பட்ட இடங்களின் கலையை நிரப்பும் வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார். வெண்ணிலா கிஷோரின் வீட்டின் உட்புறக் காட்சிகள் அருமை.

ஆடை வடிவமைப்பாளர் ஷீத்தல் ஷர்மாவின் ஆடைகளின் தேர்வு நடிகர், நடிகைகளுக்கு மேலும் அழகூட்டியிருக்கிறது.

விஷால் சந்திரசேகரின் இசையில் பாடல்கள் பெரிதாக கவனம் ஈர்க்கவில்லை என்றாலும் பின்னணி இசையில் கவனத்தை ஈர்த்திருக்கிறார்.

நிச்சயமாக இந்த  ‘சீதா ராமம்’ படம் ஒரு காவியம்தான். படத்தின் மையக் கரு என்னவோ காதலாக இருந்தாலும் அந்தக் காதலை, காதல் ஓவியமாக மாற்றியிருக்கிறது சுவையான திரைக்கதையும், திறமையான இயக்கமும்.

இந்த சீதா ராமம்’ படம் ஒரு உருக்கமான. உன்னதமான காதல் கதையாக இருக்க வேண்டும் என்ற தயாரிப்பாளர்களின் நோக்கத்தை நூறு சதவிகிதம் பூர்த்தி செய்துள்ளது என்றே சொல்லலாம்.

இது காதல் படமாகவே இருந்தாலும், 1964-ம் காலத்தில் காஷ்மீரில் நிலவி வந்த சூழல், இந்து-முஸ்லீம் இடையிலான பிரச்சினை, இந்தியா – பாகிஸ்தான் இடையிலான காஷ்மீர் பற்றிய பிரச்னை, இந்தியாவிற்குள் தொடர்ந்து ஊடுருவி வரும் தீவிரவாத அமைப்புகள், இந்திய-பாகிஸ்தான் ராணுவ மோதல்கள் என்று பல விஷயங்களையும், சுவாரஸ்யமான திரைக்கதையில் கொடுத்துள்ளனர். அதே சமயம் இரு மதங்களையும், இரு நாட்டினரையும் பகைத்துக் கொள்ள விரும்பாத அளவுக்கு நடுநிலைமையுடனும் எழுதியுள்ளனர்.

இந்தப் படத்தில் இடம் பெற்றிருக்கும் முக்கிய கதாபாத்திரங்களான ராம், சீதா மற்றும் அஃப்ரீன் ஆகியோரின் பெயர்களையும், மதங்களையும் மாற்றிப் படமெடுத்திருந்தாலும் இந்தப் படம் நிச்சயமாக இப்படி உண்மையைத்தான் பேசியிருக்கும்.

தீயில் சிக்கியிருக்கும் குழந்தையைக் காப்பாற்ற வேண்டி தாமதித்ததால் பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கிக் கொள்ளும் ராமின் செயல்பாட்டினால் அவரது இயல்பான குணமே தென்படுவதால் இது, அவரது கதாபாத்திரத்திற்கு பெருமை சேர்த்திருக்கிறது.

இந்தப் படத்தில் ஹனு, ராஜ் குமார் கந்தமுடி மற்றும் ஜெய் கிருஷ்ணா ஆகியோர் எழுதியிருக்கும் கதை, திரைக்கதையும், கார்க்கி எழுதிய வசனங்களும் தேசம், தேசப் பற்று, எல்லைகள், போர், அரசியல், மற்றும் மதங்களைவிடவும் மனித நேயமே முக்கியம் என்ற கருத்தை முன் வைத்திருக்கிறது.

அதே சமயம் நூர்ஜஹான் எதற்காக ராமுக்கு காதல் கடிதங்களை எழுதியனுப்பினார் என்பதற்கான கிளைக் கதையும், அப்ரீனாவை அவரது தாத்தா அந்தக் கடிதத்தை நூர்ஜஹானிடம் கொடுக்கப் பணித்த காரணத்திற்கான கிளைக் கதையும் யாருமே ஊகிக்க முடியாதவை. சுவையான திரைக்கதை. எழுதியவர்களுக்கு நமது பாராட்டுக்கள்..!

வசனங்கள் அனைத்தும் தமிழ் மொழிக்கும், படத்திற்கும் மிகப் பெரிய பெருமையைத் தந்திருக்கிறது. “உங்கள் நாட்டை நேசிப்பதில் தவறில்லைதான். அதே சமயம் பக்கத்து நாட்டின் மீது வெறுப்பு கொள்ளவும் தேவையில்லைதான்” என்ற வசனம் இப்போதைய நிலைமையில் அனைத்து இந்தியர்களுக்கும் ஏற்ற பொதுவான கருத்துதான்.

படத்தின் நீளம் கொஞ்சம் கூடுதல்தான். அதே சமயம் படத்தின் முதல் பாதி மெதுவாக நகர்வதுபோல தெரிந்தாலும் பிற்பாதியில் காதலின் டெம்ப்ரேச்சரைக் கூட்டி வைத்து படத்தின் டெம்போவையும் கூட்டி “காதலர்களை சீக்கிரமா இணைத்து வைங்கப்பா…” என்று நம்மையும் புலம்பவே வைத்துவிட்டார் இயக்குநர்.

சீதா – ராம் ஆகியோர் பற்றிய கதை இறுதியடையும்போது திரையரங்கில் கை தட்டல் சத்தம் எழுந்தது. இதையே படத்தின் வெற்றியாக நாம் கருதலாம்.

மற்றபடி இந்த ‘சீதா ராமம்’ படம், ‘சீதா’, ‘ராமா’ என்று மீண்டும், மீண்டும் பேசவும், ரசிக்கவும் வைக்கும் தெய்வீகக் காதலைச் சொல்லும் படம் என்பதில் சந்தேகமில்லை.

RATING : 4.5 / 5

- Advertisement -

Read more

Local News