பி.வாசு, மணிவண்ணன் ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் இயக்குனர் நந்தகுமார். இவர் விஜயகாந்தை வைத்து தென்னவன் என்ற படத்தை இயக்கினார்.
அந்த பட வாய்ப்பு கிடைத்தது பற்றி பகிர்ந்துகொண்ட இவர், “பத்திரிக்கைகள், செய்தித்தாள்களில் வரும் உண்மைச்செய்திகளை அடிப்படையாகக் கொண்டு கதைகளை உருவாக்குவேன். அப்படித்தான், ‘ஆசான்’ என்ற கதையை உருவாக்கினேன். இதை எப்படியோ தெரிந்து கொண்ட முருகதாஸ், அதே கதையை, ‘ரமணா’ என்ற பெயரில் விஜயகாந்தை வைத்து எடுக்க ஆரம்பித்துவிட்டார்.
இது தெரியாமல், தெரியாமல், கதையை விஜயகாந்திடம் சொன்னேன். கதையைக் கேட்ட அவருக்கும் அதிர்ச்சி… உண்மையை அறிந்த எனக்கும் அதிர்ச்சி.
சங்கத்தில் புகார் செய்தேன். எனக்கு இழப்பீடு தருவதாக ரமணா படத் தயாரிப்பு தரப்பு கூறியது. ஆனால் இழப்பீடு எதுவும் வேண்டாம், இதுபோன்று இனிமேல் நடக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்று கூறி சென்றுவிட்டேன்.
சில நாள்கள் கழித்து விஜயகாந்த், “வேறு கதை இருந்தால் சொல்லுங்கள், படம் பண்ணலாம்” என்றார். ‘தென்னவன்’ கதையை நான் கூற, அவருக்குப் பிடித்திருந்தது.

ஆனால் அதே சமயத்தில் இயக்குனர் ஆ.என்.ஆர்.மனோகரிடம் கதை கேட்டு அவருக்கும் ஒ.கே. சொல்லி இருந்தார் விஜயகாந்த்.
இருவரையும் வரவழைத்து “உங்கள் இரு படங்களிலும் யார் படத்தில் முதலில் நான் நடிக்க வேண்டும் என்று நீங்களே பேசிக் கொண்டு முடிவெடுத்துவிட்டு என்னை சந்தியுங்கள்” என்றார்.
நானும் மனோகரும் பேசினோம். முதலில் எனது கதையை படமாக்குவது என்ற முடிவுக்கு வந்தோம். அப்படித்தான் தென்னவன் படம் உருவானது” என்றார் நந்தகுமார்.
மேலும், “கதைத்திருட்டு காரணாக விரக்தியில் இருந்த என்னை அப்படியே விட்டுவிடாமல், வேறு கதை சொல்லச் சொல்லி நடித்தும் கொடுத்த விஜயகாந்த் மிக உயர்ந்த மனிதர்” என்றார்.