இதுவரையிலும் பிரபு தேவா நடித்த அனைத்துத் திரைப்படங்களிலும் அவரது நடனத் திறமைக்காகவே அவரை நடிக்க வைத்திருந்தனர். ஆனால், இப்போது புத்தம்புதிய திரைப்படம் ஒன்றில் அதற்கு நேர்மாறான ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார் பிரபுதேவா.
‘ஹரஹர மகாதேவா’, ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படங்களை இயக்கிய இயக்குநரான சந்தோஷ் ஜெயக்குமார் பிரபுதேவா நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்குகிறார். இந்தப் படத்துக்கு ‘பொய்க்கால் குதிரை’ என பெயர் வைத்துள்ளார்கள். இந்தப் படத்தில் நடிகை வரலட்சுமியும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
இந்தப் படத்தை டார்க் ரூம் பிக்சர்ஸும், மினி ஸ்டுடியோவும் இணைந்து தயாரிக்கின்றன.
இந்தப் படத்தின் பெயர் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இன்று மாலை அந்தப் பட நிறுவனம் வெளியிட்டது.
அதைப் பார்த்த பிரபுதேவா ரசிகர்கள் மட்டுமன்றி தமிழ்த் திரையுலுக ரசிகர்கள் அனைவருமே அதிர்ச்சியாகிவிட்டார்கள்.
இந்தப் படத்தில் செயற்கை கால் பொருத்திய தோற்றத்தில் பிரபு தேவாவின் படம் இடம் பெற்றிருந்ததுதான் அனைவரின் அதிர்ச்சிக்கும் காரணமான விஷயம்.
இந்த வித்தியாசமான தோற்றமே அந்தப் படத்தின் மீது எதிர்பார்ப்பை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. ஒருவேளை இந்தக் காட்சிகள் தற்போது நடப்பதாக வைத்துக் கொண்டு பிளாஷ்பேக் காட்சியில் பிரபுதேவா நடனமாடுவதான காட்சிகள் நிச்சயமாக இருக்கும் என்கிறார்கள் தமிழ்ச் சினிமாவின் நீண்ட கால ரசிகர்கள்.