நாட்டில் பல்வேறு பிரச்சினைகளுக்காக, பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், அதில் சில போலியான போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன. அப்படிப்பட்ட போலியான போராட்டங்களை நடத்தும் போலிப் போராளிகள் சிலரின் முகத்திரையை கிழிக்க வருகிறது ‘ஓங்காரம்’ திரைப்படம்.
Yellow Cinemas நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் கெளசல்யா ஏழுமலையான் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.
கதையின் நாயகனாக ஏ.ஆர்.கேந்திரன் முனியசாமி நடிக்க, இளம் நாயகனாக யுகேஷ் அறிமுகமாகிறார். கதையின் நாயகியாக வர்ஷா விஸ்வநாத் அறிமுகமாகிறார். இவர்களுடன் மேலும் பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.
சாம் ரொனால்டு ஒளிப்பதிவு செய்யும் இப்படத்தில், செல்லம் ஜெயசீலன் கலை இயக்குநராக பணியாற்றுகிறார். மோனீஷ் பாரதி இசையமைக்கிறார். சண்டை இயக்கத்தை ‘பயர்’ கார்த்திக் கவனிக்க, மக்கள் தொடர்பாளராக கோவிந்தராஜ் பணியாற்றுகிறார். இணை தயாரிப்பாளர் பணியை ரேகா முருகன் கவனிக்கிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி ஏ.ஆர்.கேந்திரன் முனியசாமி நடித்து, இயக்குகிறார்.
இயக்குநர் ஏ.ஆர்.கேந்திரன் முனியசாமி ஏற்கெனவே ‘அய்யன்’, ‘சேது பூமி’ ஆகிய படங்களை இயக்கியவர்.
மதுரையில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு உருவாகும் இப்படம், வயிற்றுப் பிழைப்பிற்காக புரட்சியாளராக வேசம் போடும் போலி போராளிகள் பற்றியும், அவர்கள் நடத்தும் போலியான போராட்டங்களினால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் பற்றியும் அழுத்தமாகப் பதிவு செய்கிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு முழுக்க மதுரையில் படமாக்கப்பட்டு வருகிறது. தற்போது இறுதிக்கட்டப் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.