Thursday, April 11, 2024

“மணிரத்னத்தால் மட்டுமே முடியும்” – நடிகர் கார்த்தியின் பாராட்டு

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்ஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள படம் ‘பொன்னியின் செல்வன் -1’

இந்தப் படத்தில் இடம் பெற்றும் ‘பொன்னி நதி’ என்று தொடங்கும் பாடல் இன்று மாலை சென்னையில் உள்ள பிரபல மாலில் பொது மக்கள் முன்னிலையில் கோலாகலமாக வெளியானது. டிப்ஸ் ஆடியோ கம்பெனி இப்பாடலை வெளியிட்டது.

இந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் கார்த்தி, ஜெயம் ரவி மற்றும் ஜெயராம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.

நடிகர் கார்த்தி பேசும்போது, “உங்கள் அனைவரின் முன்னிலையில் முதல் பாடலை வெளியிடுவதில் மகிழ்ச்சியாக உள்ளது. ஜெயராம் சார் கூறியதுபோல, இது நம்முடைய படம். தமிழர்களுடைய படம். எல்லோர் மனதிலும் இருக்கும் படம்.

ஆனால், இப்படத்தில் ஒரு வித்தியாசம். இப்படத்தின் கதை அனைவருக்கும் தெரியும். இருப்பினும், திரைப்படமாக பார்க்க வேண்டும் என்பதில் அனைவருக்கும் ஆர்வம் இருக்கிறது.

இப்படத்தில் பணியாற்றியது சுவாரசியமாக இருந்தது. நான், ஜெயம் ரவி மற்றும் ஜெயராம் சார்தான் அதிக நாட்கள் ஒன்றாக இருந்திருக்கிறோம்.ஜெயராம் சாருடன் பணியாற்றுவது பாக்கியம். “அவர் மட்டும்தான் நடிகன். நாம் வெறும் ‘ந’ மட்டும்தான்” என்று நானும், ஜெயம் ரவியும் பேசிக் கொள்வோம். அந்தளவுக்கு திறமையான நடிகர் அவர்.

ஆழ்வார்க்கடியார் நம்பி 5-1/2 அடி உயரம். ஆனால், ஜெயராம் சார் 6-1/2 அடி. 5-1/2 அடியாக மாறுவதற்கு ஒரு விஷயம் செய்திருக்கிறார். அந்த ரகசியத்தை நான் இப்போது கூற மாட்டேன். ஆனால், அது கற்பனையிலும் நினைக்க முடியாதது. அவருடன் நாங்கள் நடித்தது எங்களுக்குக் கிடைத்த ஆசிர்வாதம்தான்.

நதிகளால்தான் நாகரிகம் பிறந்தது. நாம் பரிணாம வளர்ச்சியடைந்ததும் நதியில்தான். அந்தக் காலத்தில் பொன்னி நதி’ என்று அழைக்கப்பட்டது. இன்று காவிரி’ என்று அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு நதிக்கும் ஒவ்வொரு குணாதிசயம் இருக்கும் என்று கூறுவார்கள்.

ஒரு நதி இறுக்கமாகவும், வேகமாகவும் இருக்கும். இன்னொன்று மேலே மெதுவாக செல்லும். ஆனால் கீழே வீரியம் அதிகமாக இருக்கும். இப்படி ஒவ்வொரு நதிக்கும் ஒரு குணங்கள் இருக்கின்றது. நதிகள் கவிஞர்களை ஊக்குவித்தும், நம்மைப் போன்ற சாதாரண மனிதர்களுக்கு உந்து சக்தியாகவும் இருந்திருக்கின்றது.

பொதுவாக இந்தப் படத்தை எவ்வளவு போராடினாலும் எடுத்து முடிக்க முடியாது என்ற பல பேர் கூறினார்கள். நாங்கள் படத்தை ஆரம்பித்த பிறகு, கோவிட் வந்தது.

ஆனால், ஒரு நதிக்கு கடல் எங்கு இருக்கிறது என்று எப்படி தெரியுமோ, அதுபோல மணி சாருக்கு இந்த படத்தை எப்படி முடிக்க வேண்டும் என்பது தெரியும் என்கிற நம்பிக்கை இருந்தது. நாங்கள் எல்லோரும் மணி சாருடன் இருந்து பணியாற்றினோம். 120 நாட்களிலேயே பொன்னியின் செல்வன்–1’ மற்றும் ‘பொன்னியின் செல்வன்–2’ இரண்டையும் முடித்துவிட்டார்.

120 நாட்களில் 2 படங்களை எடுத்து முடிப்பது சாதாரண விஷயம் கிடையாது. யாரும் நம்ப மாட்டார்கள். ஜெயராம் சார் கூறியது போல விடியற்காலை 2.30 மணிக்கு மேக்கப் அப் போடுவதற்கு தயாராக இருப்போம். ஆனால், அதற்கு முன் எங்களுக்கு மேக்கப் போடுவதற்கு 30 பேர் தயாராக இருப்பார்கள். யாரும் அதிகளவில் தூங்கியதில்லை.

புத்தகம் படித்துவிட்டு அதை நினைத்துக் கொண்டு படப்பிடிப்பிற்குச் சென்றால், அதைவிட அழகாக மணி சார் அதை உருவாக்கி வைத்திருப்பார். இப்படத்தில் பணியாற்றியது கனவு போல இருந்தது.

இது போன்று ஒரு படத்தை எடுப்பதற்கு புதிதாக ஒரு மனிதன் பிறந்து 30 வருடங்கள் வளர்ந்து வர வேண்டும். இதுபோன்ற படத்தை எடுக்க வேண்டும் என்று கற்பனை செய்வதற்கே 10 வருடங்கள் ஆகும். ஆனால், மணி சாரால் மட்டுமே அதை செய்ய முடியும்.

பாடல்களுக்கு இளங்கோ கிருஷ்ணா என்ற புதியவருக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறார். பாடல் வரிகளைக் கேட்கும்போது சோழ நாட்டிற்குள் பயணம் செய்வது போன்ற உணர்வு ஏற்படுகிறது. ஏ.ஆர்.ரகுமான் சார் இப்பாடலைப் பாடியிருக்கிறார்.

பாடல் மிக சிறப்பாக உள்ளது. முற்றிலும் மாயமாக உள்ளது. நாங்கள் எடுத்ததைவிட இப்போது பார்க்கும்போது சிறப்பாக உள்ளது. அதற்கு ஏ.ஆர்.ரஹ்மான் சாரின் இசைதான் காரணம். இப்போது நீங்கள் கூச்சலிடும்போதும் மெய்சிலிர்க்கிறது.

இவ்வளவு பெரிய படத்தை எடுத்து சாதித்திருக்கிறோம் என்றால் அதற்கு லைகா புரடக்ஷன்ஸ் சுபாஸ்கரனுக்குப் பெரிய நன்றி. சுபாஸ்கரன் சார் ஒரு சுவாரசியமான மனிதர். தமிழ் சினிமாவை வேறொரு இடத்திற்கு கொண்டு செல்ல எல்லோரும் முயற்சி செய்வார்கள். ஆனால், இவர் பணத்தையும் சேர்த்து செலவழிப்பார். மிகப் பெரிய பொருட்செலவில் எடுக்கப்பட்ட படம் இது. மலேசியாவில் நடந்த ஒரு விழாவில் முதல்முறையாக அவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.

இரவு 10 மணிக்கு நாங்கள் விமானம் ஏற வேண்டும் என்று கேட்டபோது, மலேசிய விமான நிலையத்தில் வெறும் அரைமணி நேரத்தில் தொலைபேசி வாயிலாக அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொடுத்தார். எங்களுக்காக 15 நிமிடம் விமானம் தாமதம் ஆகும் அளவிற்கு புதிய விமானத்தை ஏற்பாடு செய்து கொடுத்தார். சுபாஷ்கரன் சார் மிகவும் அன்பான மனிதரும்கூட.

அந்த அன்பு சினிமா மீது மட்டுமல்லாமல் அவருடன் பழகும் அத்தனை பேரிடமும் அந்த அன்பை வெளிப்படுத்துவார். இந்த படத்தை பேரார்வத்துடன் தயாரித்தார். இப்படத்தை அவருடன் அமர்ந்து பார்க்கவேண்டுமென ஆசைப்படுகிறேன். இந்தப் படம் அவருடைய கனவு. மேலும், பல விஷயங்கள் பேசவேண்டும். ட்ரைலர் வெளியீட்டின் போது நான் அதை பேசுகிறேன். இவ்வளவு ரசிகர்கள் கூட்டத்திற்கு மத்தியில் இருப்பது மிக சிறந்த அனுபவமாக உள்ளது…” என்றார்.

- Advertisement -

Read more

Local News