“நடிகை சமந்தாவுக்கு இனிமேல் பின்னணி குரல் கொடுப்பதில்லை” என்று பிரபல பாடகியும், பின்னணி குரல் கலைஞருமான சின்மயி தெரிவித்துள்ளார்.
பல சூப்பர் ஹிட் பாடல்களைப் பாடியுள்ள பிரபல பின்னணி பாடகியான சின்மயி சிறந்த டப்பிங் கலைஞரும்கூட. நடிகைகள் சமந்தா, காஜல், தமன்னா உட்பட பலருக்குத் தமிழ், தெலுங்கில் டப்பிங் பேசி வருகிறார். நடிகை சமந்தாவுக்குத் தொடர்ந்து தெலுங்கில் டப்பிங் பேசி வந்தவரும் இவரே.
’விண்ணைத் தாண்டி வருவாயா’ படத்தின் தெலுங்குப் பதிப்பில், சமந்தாவுக்குப் பின்னணி பேசியது இவர்தான். சமந்தாவின் நடிப்பைப் போலவே அவரது பின்னணி குரலும் கவனிக்கப்பட்டது.
ஆனால், “இனிமேல் சமந்தாவுக்குக் டப்பிங் குரல் கொடுக்க வாய்ப்பில்லை” என்று சின்மயி தெரிவித்துள்ளார்.
இது பற்றி சின்மயி தனது சமூக வலைத்தளத்தில், ‘‘தெலுங்கு சினிமாவில் டப்பிங் கலைஞராக என் பயணம் முடிவடையும் என்று நினைக்கிறேன். என் சிறந்த தோழி சமந்தா தனது கேரக்டர்களுக்கு அவரே பேசி வருகிறார். அதனால், அவருக்குப் பின்னணி பேசும் வாய்ப்பு எனக்குக் கிடைக்காது. அவருடனான எனது டப்பிங் பயணம் முடிந்துவிட்டது’’ என்று எழுதியுள்ளார்.