ஒட்டு மொத்த தமிழ்த் திரையுலகையும் தன்னைச் சுற்றி சுழலவிட்டவர் எம்.ஜி.ஆர்.! ஆனால் ஆரம்ப காலகட்டத்தில் அவரது வளர்ச்சி அத்தனை வேகமாக இல்லை. சதி லீலாவதி மூலம் திரைத்துறையில் கால் பதித்த அவர், அடுத்தடுத்த படங்களில் மெல்ல ஆனால் உறுதியாக திரைத்துறையில் கால் பதித்தார்.
அவரது திரைவாழ்க்கையில் முக்கியமானது நாடோடி மன்னன் மன்னன். காரணம், அதில் அவர் நடித்ததோடு மட்டுமின்றி இயக்கவும் செய்திருந்தார். மேலும் தனது எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ் சார்பில் தனது சகோதரர் எம்.ஜி.சக்கரபாணி மற்றும் ஆர்.எம்.வீரப்பனோடு இணைந்து உருவாக்கினார்.
மிகப் பிரம்மாண்டமான முறையில் அப்படம் உருவானது. திரையுலகமே, எதற்காக இவ்வளவு செலவு செய்து ரிஸ்க் எடுக்கிறார் என அதிசயித்தது.
இதை அவருக்கு நெருக்கமான திரையுலக நண்பர்கள் வாய்விட்டே கேட்டுவிட்டார்கள்.
அதற்கு சிரித்தபடியே, “என் சம்பாத்தியம் முழுவதையும் இப்படத்திற்காக செலவு செய்துவிட்டேன். இந்த படம் வெற்றி அடைந்தால்தான் திரையுலகில் நான் வெற்றிகரமாக தொடர முடியும். அதாவது இந்த படம் வெற்றி பெற்றால் நான் மன்னன். தோல்வி அடைந்தால் நாடோடி. ஆகவேதான் படத்துக்கும் அபபடி பெயர் வைத்தேன்” என்று சொல்லி வியக்க வைத்தார்.
படம் வெற்றி பெற்று நிஜமாகவே திரையுலகின் மன்னன் ஆனார் எம்.ஜி.ஆர்.!