எம்.ஜி.ஆர். தயாரித்து இயக்கி நடித்த உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படத்தை இப்போதும் ரசிக்கலாம். அந்த படத்தின் படப்பிடிப்பின் போது நடந்த ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தை மூத்த பத்திரிகையாளர் ஹரி பகிர்ந்துகொண்டு இருக்கிறார்.
“உலகம் சுற்றும் வாலிபன் படத்திற்காக ஜப்பான் நாட்டின் டோக்கியோ நகருக்கு எம்.ஜி.ஆர். சென்றிருந்தார். அப்போது தனது நண்பர் ஒருவரை பார்க்க காரில் சென்றபோது ‘நாயர் டீ ஸ்டால்’ என்கிற போர்ட்டை பார்த்ததும் ஆச்சர்யப்பட்டு காரை நிறுத்த சொனார்.
அந்த கடைக்குச் சென்று, கடை உரிமையாளரிடம் பேச்சு கொடுத்தார். அப்போது அவருக்கு ஆச்சர்யம் கலந்த இன்ப அதிர்ச்சி காத்திருந்தது.
எம்.ஜி.ஆர் சினிமாவில் ஹீரோவாக நடிப்பதற்கு முன் சென்னையில் தன் தாயாருடன் சென்ட்ரல் பகுதியில் தங்கியிருந்தார். வறுமையான காலகட்டம். அப்போது ஒருநாள் வீட்டில் சமைக்க கூட அரிசி இல்லை. அப்போது, அவரின் வீட்டுக்கு அருகே குடியியிருந்த ராமன் குட்டி என்பவர் ஐந்து ரூபாயை கொடுத்து உதவினார். அந்த பணத்தில்தான் அன்று அவர்கள் உணவு அருந்தினர். இதை எம்.ஜி.ஆர் மறக்கவே இல்லை.
அந்த ராமன் குட்டிதான் ஜப்பானை சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்து டோக்கியோவில் டீ கடை வைத்திருக்கிறார்.. அவர்தான் இவர் என்பது தெரிந்தது.
உடனே, ராமன் குட்டிக்கு பெரிய தொகை ஒன்றை அளித்து மன நிறைவுடன் திரும்பினார் எம்ஜிஆர்!” என்றார் ஹரி.