நடிகர் கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படத்தில் மற்றுமொரு மலையாள நடிகர் இணைந்துள்ளார்.
‘மாநகரம்’, ‘கைதி’, ‘மாஸ்டர்’ படங்களின் வெற்றிக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கிவரும் படம் ‘விக்ரம்’.
இந்தப் படத்தை நடிகர் கமல்ஹாசன் தனது ராஜ்கமல் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பில் தயாரித்து வருகிறார்.
இந்தப் படத்தில் கமல், பகத் பாசில், விஜய் சேதுபதி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
இதன் மூன்றாம்கட்ட படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது. இந்தப் படத்தில் புதிதாக மலையாளத்தின் பிரபல நடிகரான செம்பன் வினோத் இணைந்துள்ளார்.
செம்பன் வினோத் நடிகர் மட்டுமல்ல. லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கிய ‘அங்கமாலி டைரிஸ்’, அஷ்ரப் ஹம்சா இயக்கியிருக்கும் ‘பீமன்டெ வாளி’ ஆகிய படங்களின் திரைக்கதையையும் எழுதியவர். இது தவிர பல படங்களில் இணை தயாரிப்பாளராகவும் இருந்துள்ளார்.
மலையாளத்தில் வில்லன், நாயகன், குணச்சித்திரம் என அனைத்துவகை நடிப்பிலும் கொடிகட்டியவர். தமிழில் ஏற்கெனவே ‘கோலிசோடா-2’ படத்தில் நடித்திருந்தார். இப்போது ‘விக்ரம்’ படத்தில் இணைந்திருக்கிறார்.
இந்த விக்ரம் படத்தில் ஏற்கனவே பகத் பாசில், நரேன், காளிதாஸ் ஜெயராம், ஆண்டனி வர்கீஸ் என நான்கு மலையாள நடிகர்கள் நடித்து வருகின்றனர். ஐந்தாவதாக இப்போது செம்பன் வினோத்தும் சேர்ந்துள்ளார்.