Saturday, September 21, 2024

“10 வருடத்தில் பிரச்சினையில்லாமல் வெளியானது ‘விக்ரம்’தான்” – நடிகர் கமல்ஹாசன் பேச்சு

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

“கடந்த 10 வருட காலத்தில் நான் நடித்த பிரச்சனை இல்லாமல் வெளி வந்த முதல் படம் விக்ரம்தான்..” என்று நடிகர் கமல்ஹாசன் விக்ரம்’ திரைப்பட வெற்றி விழாவில் பேசும்போது தெரிவித்துார்.

சென்னை கிண்டியில் அமைந்துள்ள மெட்ராஸ் ரேஸ் கிளப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி நடிகர் கமல் நடித்து வெளியாகிய விக்ரம்’ திரைப்படத்தின் வெற்றி விழா கொண்டாட்டம் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பாளர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், தயாரிப்பாளர் அன்புச்செழியன், இசையமைப்பாளர் அனிருத், மேலும் விக்ரம் படத்தைத் திரையிட்ட திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் வெளியிட்ட விநியோகஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்..

இந்த விழாவில் நடிகர் கமல்ஹாசன் பேசும்போது, “எனக்கு ஏதாவது வேலை வேண்டுமே என்று நினைத்துதான் சினிமாவிற்கு வந்தேன். கே.பாலச்சந்தர்தான் என்னை நடிக்க வைத்தவர். எனக்கு வெற்றிகளை தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் என் ரசிகர்கள் அனைவரும் இணைந்து பெற்றுக் கொடுத்துள்ளார்கள்.

இந்தப் படத்திற்கு மகேந்திரன், தம்பி உதயநிதி ஆகியோர் இருந்தது தைரியமாக இருந்தது.

நான் சின்னத்திரைக்கு சென்றபோது என்னிடம் சின்னத்திரைக்கு செல்ல வேண்டாம் என சொன்னார்கள். இப்போது நான் சின்னத்திரையை சுவீகரித்துக் கொண்டேன். நான் தொலைக்காட்சி வாயிலாக தான் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்றுள்ளேன்.

நான் இப்படியே உட்கார மாட்டேன். இனி ஒவ்வொரு படமும் இருக்கையின் நுனியில் அமர வைக்க உழைப்பேன். எனக்கு உழைக்கும் தமிழக மக்கள் அவர்களின் ஒரு பங்கை கொடுத்துள்ளார்கள். நாங்கள் குளிக்கும் குளம், கலையுலகம்..!

என் திறமைக்கும் அதிகமாக தமிழக மக்கள் என்னை தூக்கி பிடித்துள்ளார்கள். என்னைவிட திறமையானவர்கள் என்னை மாதிரியான குருமார்கள் இந்த துறையைவிட்டு போய் இருக்கிறார்கள்.. லோகேஷ் நீங்கள் பிறருக்கு கத்து கொடுங்கள். இந்த அனிருத் தம்பியை என்ன சொல்வது என தெரியவில்லை. யாராவது தனியாக பார்த்தால் ஏம்பா கல்லூரி போகலயா? என கேட்பதுபோல உள்ளார். ஆனால் எழுந்து நின்று பேசினால் அமிதாப்பச்சன் குரல் போல இருக்கும்.

பணத்திற்காக ஓடாமல், பணமும் வேண்டும். ஆனால் ஒரு நல்ல படம் செய்துவிட்டு அதன் மூலம் நன்றாக சம்பாதிப்போம் என்று நினைத்து உழைத்த நல்ல உழைப்பாளிகள் நாங்கள்.

ஆரோக்கியமான விமர்சனங்களையும், எங்களை தட்டி கொடுத்த பத்திரிக்கையாளர்களுக்கு நாங்கள் நன்றி சொல்ல வேண்டும். சும்மா கேலி செய்தவர்கள் விமர்சனத்தை, நாலு பேர் அப்படித்தான் சொல்வார்கள். அவர்களுக்கு பிடித்தால் பிடித்திருக்கிறது என சொல்வார்கள். என் படத்திற்கு மட்டும் இப்படி வரவேற்பு அளிப்பதை தாண்டி மற்ற படங்களுக்கும் ஆதரவு அளியுங்கள்.  

நான் படத்திற்கு சென்றால் படத்தை மற்றவர்கள் சரியாக பார்க்க மாட்டார்கள் என பல பேரை வேவு பார்க்க அனுப்பினேன். உண்மையாக சொல்கிறேன். திரையரங்கில் பாப்கார்ன் விற்பவர் முதல் பார்க்கிங்கில் சைக்கிள் பார்த்துக் கொள்பவர்வரை இந்த படம் வெளியான திரையரங்குகளில் மகிழ்ச்சியாக வேலை பார்க்க வைத்து இருக்கிறது விக்ரம் படம்.

கடந்த 10 வருட காலத்தில் நான் நடித்து பிரச்சனை இல்லாமல் வெளி வந்த படம் இந்த விக்ரம்தான். உதயநிதியை பற்றி அவர் அப்பாவிடம் புகழ்ந்து கூற வேண்டும். இவரை போல நேர்மையுடன் தயாரிப்பாளர் வேண்டும். உதயநிதி இதனை தொடர்ந்து செய்யுங்கள். அடுத்த படத்தை நீங்கள் எடுக்கும்போது, அதற்கு நாங்கள் போட்டி போட மாட்டோம். மாறாக அதற்கும் துணையாக நிற்போம்.

தொடர்ந்து நாம் ஆரோக்கியமான திரை உலகை செய்ய வேண்டும்.. நாம் அதற்காக சேர்ந்து வேலை செய்வோம்.” என்றார்.

- Advertisement -

Read more

Local News