Touring Talkies
100% Cinema

Friday, March 14, 2025

Touring Talkies

“நாகேஷூக்கு சிலை வைக்க வேண்டும்” – தமிழக அரசிடம் கமல்ஹாசன் கோரிக்கை

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

“மறைந்த தமிழ்த் திரையுலக மூத்த நடிகரான நாகேஷிற்கு சிலை வைக்க வேண்டும், அவர் பெயரில் விருது ஏற்படுத்த வேண்டும்” என்று நடிகர் கமல்ஹாசன் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

நேற்றைய தினம் நடிகர் நாகேஷின் பிறந்த தினமாகும். இதையொட்டி பல்வேறு நடிகர், நடிகைகளும் தத்தமது சமூக வலைத்தளங்களில் நாகேஷின் நடிப்பையும், திரையுலக வாழ்க்கையும் நினைவு கூர்ந்தார்கள்.

மக்கள் நீதி மையம்’ கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசனும் நாகேஷை நினைவு கூர்ந்து ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் நடிகர் நாகேஷிற்கு சிலை வைக்க வேண்டும். ஏதாவது ஒரு சாலைக்கு அவருடைய பெயரைச் சூட்ட வேண்டும். அவருடைய பெயரில் விருது வழங்க வேண்டும் என்று தமிழக அரசிடம் கமல்ஹாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், “நகைச்சுவை நடிப்பில் தனக்கென தனி முத்திரையைப் பதித்த நாகேஷ் இந்திய சினிமாவின் இணையற்ற நடிகர்களில் ஒருவர். 1000 திரைப்படங்களுக்கு மேல் நடித்து தமிழர்களை மகிழ்வித்தவர். இந்தியாவின் ஜெர்ரி லூயிஸ்’, ‘தமிழகத்தின் சார்லி சாப்ளின்’ என்றெல்லாம் அவரது நடிப்பு புகழப்பட்டது.

1958-ல் ‘மனமுள்ள மறுதாரம்’ படத்தில் அறிமுகமாகி 2008-ல் ‘தசாவதாரம்’வரை மிகச் சரியாக அரை நூற்றாண்டுகள் நீடித்தது அவரது கலைப் பயணம். எங்கும், எப்போதும் தன்னை முன்னிறுத்திக் கொள்வதோ, விருதுகள், அங்கீகாரங்களுக்கோ ஆள் பிடிப்பதோ நாகேஷின் இயல்பல்ல. அதன் பொருட்டே வாழும்போதும், வாழ்ந்த பிறகும் புறக்கணிக்கப்பட்ட மகா கலைஞன் அவர்.

1974-ல் தமிழக அரசு அளித்த ‘கலைமாமணி’ விருது, 1994-ல் ‘நம்மவர்’ திரைப்படத்திற்காக மத்திய, மாநில அரசுகளின் ‘சிறந்த துணை நடிகர்’ விருது ஆகியவைதான் அவரது கலை வாழ்வில் கிடைத்த சிறு அங்கீகாரங்கள்.

என்னைப் பொறுத்தவரையில் சினிமாவின் எந்த உயரிய விருதுக்கும் தகுதியானவர் நாகேஷ். அவர் பிரான்ஸிலோ, அமெரிக்காவிலோ, ஜெர்மனியிலோ பிறந்திருந்தால் பெற்றிருந்திருக்கக் கூடிய கவுரவம் என்னவாக இருந்திருக்கும் என்பதை ஊகித்துப் பார்க்கிறேன்.

அவர் மறைந்து 12 ஆண்டுகள் ஆன பிறகும்கூட அவர் மீதான அரசின் புறக்கணிப்பு தொடர்வது, ஒரு சக கலைஞனாக எனக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.

இந்த மகத்தான நடிகரின் கலைப் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் சென்னையில் ஒரு சாலைக்கு அவரது பெயரைச் சூட்டுவதும், அவரது பெயரில் ஒரு விருதினைத் தோற்றுவிப்பதும், எம்.ஜி.ஆர். அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவன வளாகத்திற்குள் அவரது சிலையை அமைப்பதும் குறைந்தபட்ச அங்கீகாரங்களாக அமையும்.

கலைஞர்களைப் போற்றுவதும் நல்லரசின் கடமை என்பதை உணர்ந்து தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்…” என்று கமல்ஹாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

- Advertisement -

Read more

Local News