இந்தியத் திரையுலகத்தில் சாகாவரம் பெற்ற பாடல்களை இசைத்திருக்கிறார் இசைஞானி இளையராஜா. அவருடைய பாடல்களை பல்வேறு செல்போன் நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளருக்குக் காலர் டியூன்களாகவும், ரிங் டோன்களாகவும் கொடுத்து அதற்குத் தனியாகப் பணம் வசூலித்து வருகின்றன.
இதே போல சிலர் இளையராஜாவின் பழைய பாடல்களை நவீன முறையில் தர மேம்படுத்தி அதை இணையத்தில் இலசவமாகவும், கட்டணத்திற்காகவும் பதிவிட்டு வருகிறார்கள். இதனையும் லட்சக்கணக்கான ரசிகர்கள் டவுன்லோடு செய்து கேட்டு மகிழ்ந்து வருகிறார்கள்.
இதற்கு முறைப்படி இளையராஜாவிடம் அனுமதி வாங்கினார்களா என்பது யாருக்குமே தெரியாது.
ஆனால் இதையெல்லாம் கண்டு கொள்ளாத இளையராஜா தற்போது தனது ரசிகர்கள் தனது பாடல்களை உயர் தரமான தொழில் நுட்பத்தில் கேட்க வேண்டும் என்பதற்காகவே ஒரு இசை செயலியை துவக்கியிருக்கிறார்.
இந்த செயலில் இளையராஜாவின் அனைத்து பாடல்களும் தரமான வகையில் உருவாக்கப்பட்டு சேமித்து வைக்கப்பட்டுள்ளது. இந்தச் செயலிக்காக இளையராஜா தான் முன்னர் பாடிய சில பாடல்களை திரும்பவும் பாடி பதிவு செய்திருக்கிறாராம்.
இந்த செயலி விரைவில் பயன்பாட்டுக்கு வரவிருக்கிறது..!