தமிழ்த் திரையுலகின் முன்னணி தயாரிப்பாளரான சி.வி.குமாரின் திருக்குமரன் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம், கதையம்சம் உள்ள படங்களை தயாரிப்பதை நோக்கமாகக் கொண்டதாகும்.
தற்போது, ‘இடும்பன்காரி’ என்னும் புதிய திரைப்படத்திற்காக அரசியல்வாதி மற்றும் தொழிலதிபர் பி.டி.அரசகுமாரின் பி.டி.கே. பிலிம்ஸுடன் திருக்குமரன் எண்ட்டெர்டெயின்மென்ட் கை கோர்த்துள்ளது.
புதுமுக இயக்குநர் அருல் அஜித் இயக்கும் இந்த ‘இடும்பன்காரி’ படத்தில் ஷிவதா நாயர் மற்றும் ரம்யா பாண்டியன் இருவரும் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
மேலும் அனுபமா குமார், ‘நீயா நானா’ புகழ் கோபிநாத், இயக்குநர் வேலு பிரபாகரன், அருண் மற்றும் ஜோதி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
இப்படத்தின் ஒளிப்பதிவை அமீன் செய்ய, ‘தடம்’ புகழ் அருண்ராஜ் இசையமைக்கிறார். இக்னேஷியஸ் அஸ்வின் படத் தொகுப்பை கையாள்கிறார்.
பார்வையாளர்களை அவர்களது இருக்கையின் நுனிக்கு வர வைக்கும் பிரத்யேக அனுபவத்தைத் தரும் பரபரப்புமிக்க துப்பறியும் திரில்லராக இந்த ‘இடும்பன்காரி’ திரைப்படம் இருக்கும் என்று படக் குழுவின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துப்பறியும் திரில்லர் வகையை சேர்ந்த இந்த படத்தின் தலைப்பு மற்றும் முதல் பார்வை இன்று வெளியிடப்பட்டன.
தற்போது படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இன்னும் ஒரு சில நாட்களில் இது நிறைவடைந்தவுடன், போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று, ‘இடும்பன்காரி’ விரைவில் திரைக்கு வரவுள்ளது.

