Thursday, April 11, 2024

‘கார்கி’ படத்தின் வசூல் 25 கோடி ரூபாயாம்! – விநியோகஸ்தர் சக்திவேலன் சொன்ன தகவல்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பிளாக்கி ஜெனி & மை லிஃப்ட் புட் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில், நடிகர் சூர்யாவின் 2D என்டர்டெயின்மென்ட் நிறுவனம் பெருமையுடன் வழங்கிய திரைப்படம் ‘கார்கி’.

கவுதம் ராமச்சந்திரன் இயக்கத்தில் சாய் பல்லவி நடிப்பில் வெளியான இப்படம் ரசிகர்களை கவர்ந்து வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது.

இப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா நேற்று மாலை பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகை சாய் பல்லவி, ஆர்.எஸ்.சிவாஜி, சரவணன், காளி வெங்கட், இயக்குநர் கவுதம் ராமச்சந்திரன், இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா உள்ளிட்ட படக் குழுவினர் கலந்துக் கொண்டனர்.

இந்நிகழ்வில் சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன் பேசும்போது, “இந்தக் ‘கார்கி’ படத்தில் பணியாற்றிய ஒவ்வொருவரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். இப்படத்தின் வெற்றியை அறைகூவல்விட்டு கூறியது பத்திரிகையாளர்கள்தான்.

விமர்சனங்களும், பத்திரிகையாளர்களும் இப்படத்தைத் தூக்கிப் பிடித்ததுதான் வெற்றிக்கு காரணம். இப்படத்தின் விமர்சனத்தை தனித்தனியாக வாட்ஸ்அப்பில் எனக்கு அனுப்பி கொண்டேயிருந்தார்கள்.

இப்படத்தை முதல்முதலாக பார்க்கும்போது அனைவருக்கும் என்ன உணர்வு இருந்ததோ? அதே உணர்வுதான் நான் பார்க்கும்போதும் இருந்தது.

இப்படத்தை தெருத்தெருவாக கொண்டு சேர்க்க வேண்டும் என்று முடிவெடுத்தேன். அதன் பிறகு 2-டி ராஜா அண்ணனிடம் சென்று இப்படத்தைப் பற்றிக் கூறினேன். சூர்யா அண்ணன் இது போன்ற படங்களுக்கு நிச்சயம் ஆதரவு கொடுப்பார் என்று கூறினார்.

அதன் பிறகு இப்படத்தைப் பார்த்த சூர்யா சார், “இந்தப் படத்திற்கு ஆதரவு தரவில்லையென்றால், வேறு எந்த படத்திற்கு தருவது..? என்று கூறினார். மேலும், “இப்படம் செலவிட்ட தொகையை மீட்டு தருமா..?” என்று கேட்டார். “நிச்சயம் அவர்கள் செலவு செய்ததைவிட இரண்டு மடங்கு அல்லது மூன்று மடங்கு சம்பாதித்து விடும்” என்று கூறினேன். ஆகையால் சூர்யா சாரிடம் பேசி அவருடைய 2D என்டர்டெயின்மென்ட் இணைந்து வெளியிட்டோம்.

இன்றைய தேதிவரையிலும் இந்தப் படம் தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கிறது. இதுநாள்வரையிலும் வந்த கலெக்சன்படி படத்தின் தயாரிப்பாளரான இயக்குநர் கவுதமுக்கு 4 மடங்கு பணம் கிடைத்திருக்கும். அதாவது இந்தப் படம் இப்போதுவரையிலும் 25 கோடிவரையிலும் சம்பாதித்திருக்கிறது. இதுவே மிகப் பெரிய சாதனை..!

இப்போது, ‘சூரரைப் போற்று’ படம் 5 தேசிய விருதுகளை சூறையாடி வந்துருக்கிறது. இப்படம் ஊரடங்கு சமயத்தில் ஓடிடி-யில் வெளியாகியது. அப்போது சூர்யா சார் என் நிறுவனத்தை அவர்கள் வெளியில் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. இருப்பினும், என்னுடைய லோகோவை போட்டு சக்தி பிலிம் ஃபேக்டரி இப்படத்தை விநியோகிக்கிறது என்று வெளியிட்டார்கள். நான் சூர்யா சாருக்கு மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன்…” என்றார்.

- Advertisement -

Read more

Local News