நடிப்பு, இயக்கம், தயாரிப்பு, எழுத்து என திரையுலகில் பல பரிணாமங்களை கொண்டவர் நடிகர் தனுஷ். “ராயன்” படத்தைத் தொடர்ந்து, அவர் “நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்” என்ற புதிய படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் பிப்ரவரி 21ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. இப்படத்தின் பாடல்கள் வெளியானதும் ரசிகர்களிடையே அமோக வரவேற்பைப் பெற்றன.
இப்படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியானது, மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இளைஞர்களின் காதல், உறவுமுறை மற்றும் திருமணம் பற்றிய கதையம்சத்துடன் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இசையமைப்பாளராக ஜி.வி. பிரகாஷ் குமார் பணியாற்றியுள்ளார்.
![](https://touringtalkies.co/wp-content/uploads/2025/02/1000157548.jpg)
படத்தில் பவிஷ், அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், மேத்யூ தாமஸ், வெங்கடேஷ் மேனன், ரபியா கதூன், ரம்யா ரங்கநாதன், சித்தார்த் ஷங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது. விழாவில் நடிகர் அருண் விஜய், எஸ்.ஜே. சூர்யா, ஜி.வி. பிரகாஷ் மற்றும் இயக்குனர்கள் ராஜ்குமார் பெரியசாமி, விக்னேஷ் ராஜா, தமிழரசன் பச்சமுத்து ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.
விழாவில் பேசிய இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ், “நடிகர் தனுஷ் இயக்கிய படத்தில் நான் முதன்முறையாக இசையமைத்திருக்கிறேன். இது கண்டிப்பாக ஒரு மாயாஜாலத்தை உருவாக்கும். நாங்கள் படத்தை பார்த்துவிட்டோம், ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ திரைப்படம் உறுதியான ஹிட்! இப்படத்தின் தயாரிப்பாளர் ஸ்ரேயாஸ் கூறினார், இந்த படத்திற்கான இசையமைப்புக்கு நான் எந்த சம்பளமும் வாங்கவில்லை. ‘ஜெயிலர்’ படம் ஹிட் ஆன பிறகு படக்குழுவை அழைத்து பரிசளித்தது போல், இப்படம் வெளியானதும் என்னை சிறப்பாக கவனிக்க வேண்டும்!” என நகைச்சுவையாக தெரிவித்தார்.