தன்னுடைய இயக்கத்தில் நடித்த அஜீத் போலித்தனமே இல்லாமல் பழகியதாகச் சொல்கிறார் இயக்குநர் விக்மரன்.
அஜீத் பற்றி ஒரு பேட்டியில் விக்ரமன் சொல்கையில், “நான் இயக்கிய ‘உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்’ படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்தார் அஜீத். அவரைப் பொறுத்தவரையில் அவர் போலித்தனமில்லாதவர். மனதில் பட்டதை பளிச்சென்று வெளியில் சொல்லிவிடுவார். நான் அவரை எப்பவுமே ஜென்டில்மேன் என்றுதான் அழைப்பேன்.
நான் அவரை புதிய மன்னர்கள் படத்திலேயே நடிக்க வைக்க இருந்தது. அப்போது அவருக்கு உடல் நிலைமை சரியில்லாமல் இருந்தது. அதனால் நடிக்க வைக்க முடியவில்லை.
இந்தப் படத்தில் அவர் நடிக்க வந்ததற்கே ஒரு காரணம் இருக்கிறது. படைப்பாளிகள்-பெப்சி பிரச்சினையில் அஜீத் பெப்சியின் பக்கம் நின்றார். நாங்களெல்லாம் படைப்பாளிகள் சைடில் இருந்தோம். அப்போதே அஜீத்தை வைத்து யாரும் படம் தயாரிக்கக் கூடாது.. இயக்கக் கூடாது என்று எங்களுக்குள் பேசி வைத்திருந்தோம்.

ஆனால் அந்தப் பிரச்சினையெல்லாம் முடிந்த பிறகு நான் புதிய படத்தைத் துவக்கியபோது அந்தப் படத்தின் தயாரிப்பாளர்கள்தான் “அஜீத் இதில் நடித்தால் நன்றாக இருக்கும்” என்றார்கள். எனக்கும் அது சரிதான் என்று தோன்றியது. எனவே எதையும் மனதில் வைத்துக் கொள்ளாமல் அந்தப் படத்தில் அவரை நடிக்க வைத்தேன்.
அந்தப் படத்தின் படப்பிடிப்பு மகாபலிபுரத்தையும் தாண்டி உத்தண்டியில் நடைபெற்றது. இரவு 1 மணிக்கு வீட்டுக்குக் கிளம்பினாலும் மறுநாள் காலை 6.30 மணிக்கெல்லாம் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்திருவார். அந்த அளவுக்கு டெடிகேஷன் உள்ளவர் அஜித்.
அதற்குப் பிறகும் சந்திக்கும்போதெல்லாம் “நாம சேர்ந்து ஒரு படம் செய்யலாம் ஸார்”ன்னு சொல்லுவார். நானும், அதற்காகத்தான் காத்திருந்தேன். ஆனால் 2000-க்குப் பிறகு அவர் கமர்ஷியல் ஹீரோவாக உருமாறிவிட்டார். அதனால் அவரை வைத்து என்னால் படம் இயக்க முடியாமல் போனது..” என்று வருத்தப்பட்டுச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் விக்ரமன்.