சில ஆண்டுகளுக்கு முன் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் ‘சிவி’. ஒருவரின் கழுத்து மேல் பேய் உட்கார்ந்து பழிவாங்கும் கதை பலருடைய கவனத்தை ஈர்த்தது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இதன் 2-ம் பாகம் உருவாகி வருகிறது.
துளசி சினி ஆர்ட்ஸ் நிறுவனம் அதிக பொருட் செலவில் இந்த சிவி பாகம்-2 என்ற திரைப்படத்தை மிக பிரம்மாண்டமாக தயாரித்து உள்ளார்கள்.
இப்படத்தில் பழம் பெரும் நடிகரான தேங்காய் சீனிவாசனின் பேரன் யோகி, நடிகர் சரண்ராஜின் மகன் தேஜா சரண்ராஜ் இருவரும் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
மேலும் சுவாதிஷா, சந்தோஷ், கிறிஸ்டின், தாடி பாலாஜி, சாம்ஸ், கோதண்டம், காயத்ரி, குமரன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
இயக்குநர் – K.R.செந்தில்நாதன், ஒளிப்பதிவு – B.L. சஞ்சய், படத் தொகுப்பு – S.P.அஹமத், இசை – F.S.பைஜில், சண்டை இயக்கம் – பில்லா ஜெகன், கிரியட்டிவ் ஹெட் – v. அணில் குமார், கலை இயக்கம் – சூரியா, இணை தயாரிப்பு – விஜய் – பானு, தயாரிப்பாளர் – லலிதா கஸ்தூரி கண்ணன், மக்கள் தொடர்பு – R.குமரேசன்.
இதுவரை தமிழ் திரையுலகில் சொல்லப்படாத வகையில் மாறுபட்ட கோணத்தில் ஆங்கில படத்திற்கு நிகராக இந்தப் படத்தைப் படமாக்கியுள்ளார்கள்.
விஷூவல் கம்யூனிகேஷன் படிக்கின்ற மாணவ, மாணவிகள், பல வருடங்களாக அரசாங்கத்தால் தடை செய்யப்பட்ட ஒரு மருத்துவமனைக்கு ஆய்வு செய்ய செல்கிறார்கள். அங்கே அவர்கள் திடீரென காணாமல் போகிறார்கள்.
காணாமல் போன மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் போலீசாரிடம் புகார் அளிக்க, போலீசார் மாணவ மாணவிகள் சென்ற மருத்துவமனைக்கு தேடிச் செல்கிறார்கள்.
அங்கு சில வீடியோ ஆதாரங்கள் மற்றும் செல்போன் ஆதாரங்களை கைப்பற்றுகின்றனர். அதை ஆய்வு செய்த போலீசார், அதில் பல ரத்தம் உறைய வைக்கும் சில சம்பவங்களை கண்டு அதிர்ச்சி அடைகின்றனர். அது என்ன என்பதுதான் இந்தப் படத்தின் சஸ்பென்ஸ். திரில்லர் கதை. இதன் பின்னணியில்தான் விறுவிறுப்பு குறையாமல் படத்தை உருவாக்கி இருக்கிறார்கள்.
இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி சமூக வலைத்தளங்களில் பலருடைய கவனத்தை ஈர்த்துள்ளது.