பிரபல தயாரிப்பாளரான சி.வி.குமார் தனது அடுத்தப் படத்தைத் துவக்கியிருக்கிறார்.
கொரோனா காலக்கட்டம்.. மூன்றாவது அலை துவங்கிவிட்டது.. தியேட்டர்களில் கூட்டம் வரவில்லை.. என்றெல்லாம் புலம்பல்கள் தமிழ்த் திரையுலகத்தில் இருந்தாலும் படத் தயாரிப்புகளும் நிற்கவில்லை.
திருக்குமரன் எண்ட்டெர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் தயாரிப்பாளரான சி.வி.குமார் இன்று தனது புதிய படத்தின் படப்பிடிப்பினைத் துவக்கியிருக்கிறார்.
இந்தப் புதிய படத்தில் ஆண் மாடலிங் துறையில் முன்னணியில் இருக்கும் கெளசிக் ராம் நாயகனாக அறிமுகமாகிறார். நாயகியாக ‘நெடுநல்வாடை’ படத்தில் நடித்த அஞ்சலி நாயர் நடிக்கிறாராம். அறிமுக இயக்குநரான ராகவ் மிர்தாத் இந்தப் படத்தை இயக்குகிறார்.
ஒரு இளம் ஜோடிக்கு இடையேயான திருமணத்திற்குப் பிறகு வாழ்க்கையை ஆராயும் ஒரு காதல் நாடகம்தான் இந்தப் படத்தின் கதைக் கருவாம்.
இந்தப் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது பற்றி நாயகி அஞ்சலி நாயர் கூறும்போது, “இந்தப் படம் சம்பந்தமாக சில வாரங்களுக்கு முன்பு எனது மேலாளரிடமிருந்து எனக்கு அழைப்பு வந்தது. அவர் இந்த ஸ்கிரிப்ட் பற்றி என்னிடம் கூறினார், மேலும் இந்த கதாபாத்திரத்திற்கு நான் கச்சிதமாக இருப்பேன் என்றும் குறிப்பிட்டார்.
பின்னர், நானும் இயக்குநர் ராகவும் ஸ்கிரிப்ட் விவரிப்பதற்கான வீடியோ அழைப்பை அமைத்தோம். 3-4 மணி நேரத்தில், நான் என் கதாபாத்திரத்தின் மீது காதல் கொண்டேன். ராகவ் எவ்வளவு அழகாக கதையை எழுதியிருக்கிறார்.
ஒரு பையன் ஒரு பெண்ணைச் சந்தித்து காதலில் விழுவது ஒரு ரன்-ஆஃப்-மில் பாடம் அல்ல. நிஜ வாழ்க்கையில் உறவுகள் எவ்வாறு செயல்படுகின்றன? ஆண்களும் பெண்களும் எதிர்கொள்ளும் பிரச்சனைகள்.. திருமணத்திற்குப் பிறகு தம்பதிகள் என்ன மாதிரியான யதார்த்தமான பிரச்சனைகளை சந்திக்கிறார்கள் என்பதை இந்தப் படம் ஆழமாக ஆராய்கிறது.
நெடுநல்வாடை படத்தில் எனது நடிப்பைப் பார்த்திருந்த ராகவ், இந்தப் படத்தில் என் கதாபாத்திரத்தின் பெயரை ராதா என்றே வைத்திருக்கிறார்…” என்று பெறுமை பொங்கக் கூறுகிறார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்று காலை பூஜையுடன் துவங்கியது.