‘ஆக்ஷன் கிங்’கான அர்ஜூன் ஆக்ஷன், க்ரைம் படங்களுக்கு பெயர் பெற்றவர். அவர் நடித்த க்ரைம் ஆக்ஷன் படங்களின் பிரம்மாண்டமான வெற்றிகளை தொடர்ந்து, ‘ஆக்ஷன் கிங்’ பட்டத்தை பெற்றவர்.
அவரது தொடர் திரில்லர் படங்களின் வெற்றிகளை தொடர்ந்து, தற்போது புதிதாக ஒரு வித்தியாசமான க்ரைம் திரில்லர் படத்தில் நடிக்கவுள்ளார். நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இப்படத்தில் நாயகியாக நடிக்கிறார்.
இந்தப் படத்தை GS ARTS நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் G. அருள் குமார் தயாரிக்கிறார்.
இந்தப் படத்தில் ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன், ஐஸ்வர்யா ராஜேஷ், பிரவீன் ராஜா, பிராங்க்ஸ்டர் ராகுல், அபிராமி வெங்கடாசலம் மற்றும் இன்னும் பல முக்கிய பிரபலங்களும் நடிக்கின்றனர்.
ஒளிப்பதிவு – சரவணன் அபிமன்யு, இசை – பரத் ஆசீவகன், படத் தொகுப்பு – லாரன்ஸ் கிஷோர், கலை இயக்கம் – அருண் சங்கர், சண்டை இயக்கம் – விக்கி, மக்கள் தொடர்பு – சுரேஷ் சந்திரா. இயக்குநர் தினேஷ் லக்ஷ்மணன் எழுதி இயக்கியுள்ளார்.
படத்தின் தயாரிப்பாளரான G.அருள் குமார் படம் குறித்து பேசும்போது, “இது ஒரு வகையான க்ரைம் – த்ரில்லர் இன்வெஸ்டிகேஷன் கதை. மன இறுக்கம் கொண்ட ஆட்டிஸ்டிக் குழந்தைகளின் பின்னணியில் ஒரு பெண் கதாப்பாத்திரத்தை மையமாக கொண்ட திரைப்படம் இது.
‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன் இப்படத்தில் விசாரணை அதிகாரியாக நடிக்கிறார். ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை பெண் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவரது கதாபாத்திரத்திம் படத்தில் மிகவும் முக்கியத்துவம் மிகுந்த கதாப்பாத்திரமாகும்.
இயக்குநர் தினேஷ் லக்ஷ்மணன் திரைக்கதையை என்னிடம் முதன்முதலில் விவரித்தபோது, நான் பார்வையாளராக மிகவும் ரசித்தேன். திரையரங்குகளில் இப்படத்தை பார்க்கும் பார்வையாளர்களுக்கு, நீண்ட காலத்திற்குப் பிறகு க்ரைம் -த்ரில்லர் இன்வெஸ்டிகேஷன் வகைகளில் ஒரு புதிய அனுபவத்தை இப்படம் தரும். நடிகர் அர்ஜுன் இந்த வகையைச் சேர்ந்த திரைப்படங்களில் அதிகம் நடித்திருந்தாலும், இப்படம் அதிலிருந்து மாறுபட்டு, தனித்துவமாகவும் வித்தியாசமாகவும் இருக்கும்…” என்றார்.
இந்தப் புதிய படத்தின் துவக்க விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் படத்தின் நாயகியான ஐஸ்வர்யா ராஜேஷ் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி படத்தினைத் துவக்கி வைத்தார்.