மலையாள சினிமா நடிகர்கள் சங்கமான ‘அம்மா’ அமைப்பின் 2 துணைத் தலைவர்கள் மற்றும் 11 செயற்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் வரும் டிசம்பர் 19-ம் தேதியன்று நடைபெறவுள்ளது.
மலையாள சினிமாவில் நடிக்கும் நடிகர், நடிகைகள் அனைவரும் ‘அம்மா’ என்ற அமைப்பின் கீழ் செயல்படுகிறார்கள். இந்த அமைப்பிற்கு 3 வருடங்களுக்கு ஒரு முறை தேர்தல் நடப்பது வழக்கம்.
அந்த வகையில் கடந்த 2018-ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளின் பதவிக் காலம் இந்தாண்டு முடிவடைவதால் புதிய நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்க தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தது. தேர்தலில் போட்டியிடுபவர்கள் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். நேற்றைக்கு புதன்கிழமையன்று வேட்பு மனுக்களை வாபஸ் பெற கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இதில் தலைவர் பதவிக்கு தற்போதைய தலைவரான மோகன்லாலும், பொதுச் செயலாளர் பதவிக்கு தற்போதைய செயலாளரான எடவலா பாபுவும் போட்டியிடுவதாக அறிவித்து வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். இந்தப் பதவிக்கு வேறு யாரும் போட்டியிடாததால் இவர்கள் இருவரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இதேபோல் பொருளாளர் பதவிக்கு சித்திக்கும், இணைச் செயலாளர் பதவிக்கு ஜெயசூர்யாவும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
ஆனால், 2 துணைத் தலைவர்கள் மற்றும் 11 செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்குத்தான் அதிகப்படியான வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
நடிகைகள் ஆஷா சரத்தும், ஸ்வேதா மேனனும் துணைத் தலைவர்கள் பதவிக்குப் போட்டியிட விண்ணப்பித்துள்ளனர். இதே பதவிக்கு நடிகர்கள் முகேஷ், ஜெகதீஷ், மணியம்பிள்ளை ராஜூ ஆகிய மூன்று பேரும் விண்ணப்பித்திருந்தனர்.
ஆனால் இந்த முறை இந்தத் துணைத் தலைவர் பதவிகளுக்கு பெண்களையே தேர்ந்தெடுக்கலாம் என்று மோகன்லாலும் மற்ற மூத்த நடிகர்களும் நினைத்திருந்தனர்.
காரணம் நடிகை கடத்தப்பட்ட வழக்கு தொடர்பாக எழுந்த பல பிரச்சினைகளால் WCC என்ற அமைப்பினை மலையாளத் திரையுலகத்தில் இருக்கும் பெண்களில் சிலர் உருவாக்கினார்கள். இந்த அமைப்புக்கும், ‘அம்மா’ அமைப்புக்கும் இடையே கடந்த சில வருடங்களாக கடும் மோதல் நிலவி வருகிறது.
‘அம்மா’ அமைப்பில் பெண்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் தரப்படவில்லை என்று WCC அமைப்பில் இருக்கும் பெண்கள் குற்றம் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இதனால் இந்த முறை 2 துணைத் தலைவர்கள் பதவிக்கு பெண்களை கொண்டு வரலாம் என்று மோகன்லால் நினைத்தார்.
இதற்காக முகேஷிடமும், ஜெகதீஷிடமும் அவர் பேசிய பின்பு அவர்கள் தங்களது வேட்பு மனுவை வாபஸ் பெற்றுவிட்டனர். ஆனால் நடிகர் மணியம்பிள்ளை ராஜூ மட்டும் போட்டியில் இருந்து விலக மறுத்துவிட்டாராம். இத்தனைக்கும் அவர் மோகன்லாலின் மிக நெருங்கிய நண்பர்தான்.
தான் இந்த முறை ஏதாவது ஒரு பதவியில் இருந்தாக வேண்டும் என்று நினைத்து கடந்த 6 மாதங்களுக்கு முன்பிருந்தே சக நடிகர், நடிகைகளிடையே வாக்கு சேகரிப்பையும் தொடங்கிவிட்டார் மணியம்பிள்ளை ராஜூ.
மணியம்பிள்ளை ராஜூ நடிகர் மட்டுமன்றி ஒரு தயாரிப்பாளராகவும் இருப்பதால் பல நடிகர், நடிகைகளுக்கு அவர் மீது மரியாதையும் உண்டு. இதனால் நிச்சயமாக மணியம்பிள்ளை ராஜூ வெற்றி பெறுவார் என்றே மலையாள திரையுலகத்தினர் கருதுகிறார்கள். இதனால்தான் மணியம்பிள்ளை ராஜூவும் உறுதியாக விடாப்பிடியாக நின்றுவிட்டாராம்.
இன்னொரு பக்கம் நடிகை ஆஷா சரத் இப்போதுதான் முதல்முறையாக ‘அம்மா’ அமைப்பில் போட்டியிடுகிறார் என்பதால் ஏற்கெனவே சென்ற நிர்வாகக் கமிட்டியில் துணைத் தலைவராக இருந்த ஸ்வேதா மேனனை இந்த முறை ஆஷா சரத்திற்கு அந்தப் பதவியை விட்டுக் கொடுக்கும்படி பலரும் கேட்டும் அவரும் மறுத்துவிட்டாராம். ஆஷா சரத்தோ “இரண்டில் ஒன்று பார்த்துவிடுவோம்…” என்ற லட்சியத்தோடு போட்டியில் இருந்து விலக மறுத்துவிட்டாராம்.
இதேபோல் 11 செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு ஹனிரோஸ், லேனா, மஞ்சு பிள்ளை, ரச்சனா நாராயணன்குட்டி பாபுராஜ், நிவின் பாலி, சுதீர் கரமனா, டினி டோம், டொவினோ தாமஸ், உன்னி முகுந்தன், லால், விஜயபாபு, சுரேஷ் கிருஷ்ணா, நாசர் லதீப் ஆகிய14 பேர் தங்களது வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளனர்.
இவர்களில் சிலர் கடைசி நேரத்தில் தங்களது வேட்பு மனுவை வாபஸ் பெறலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நாசர் லத்தீப் மட்டுமே வேட்பு மனுவை வாபஸ் பெற்றாராம். இதனால் மீதமிருந்த 13 பேர் போட்டியிடுவதில் உறுதியாக இருந்ததால் ‘அம்மா’ அமைப்புக்கு தேர்தல் நடத்த வேண்டிய கட்டாயம் வந்துவிட்டது.
வரும் டிசம்பர் 19-ம் தேதியன்று ‘அம்மா’ அமைப்பின் வருடாந்திர பொதுக் குழுக் கூட்டம் கொச்சியில் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் இந்தத் தேர்தலும் நடைபெற்று உடனடியாக முடிவுகளும் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.