Friday, April 12, 2024

“நகைச்சுவை வேடத்திலும் என்னால் நடிக்க முடியும் என்பதை நிரூபித்த ‘பேய் மாமா’ படம்” – நடிகை ரேகாவின் உற்சாகப் பேட்டி

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இயக்குர் சக்தி சிதம்பரத்தின் இயக்கத்தில் நேற்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ள திரைப்படம் ‘பேய் மாமா.’

இந்தப் படத்தில், காமெடி நடிகர் யோகிபாபு கதையின் நாயகனாக நடித்துள்ளார்.  மேலும் மாளவிகா மேனன், மொட்டை’ ராஜேந்திரன், நடிகை ரேகா, எம்.எஸ்.பாஸ்கர், இமான் அண்ணாச்சி, கோவை சரளா உள்ளிட்ட மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளனர்.

திகில் மற்றும் காமெடி கலந்த கதைக் களத்துடன் நேற்று வெளியாகியுள்ள இந்தப் படத்தில், அனைவரது நடிப்புக்கும் பாசிட்டிவ் விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளது.

இந்நிலையில் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகை ரேகா இந்தப் படத்தில் நடித்த அனுபவம் பற்றியும், படம் பார்த்தவர்களின் பாராட்டுக்கள் தனக்கு வந்தது பற்றியும் குறிப்பிட்டுப் பேசியுள்ளார்.

இது குறித்து அவர் பேசும்போது, “நான் ‘கடலோரக் கவிதைகள்’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமானபோது எப்படி என்னை வரவேற்று உற்சாகப்படுத்தினீர்களோ… அதே போல என் திருமணத்திற்கு பிறகு நான் கேரக்டர் ஆர்டிஸ்டாக நடிக்க வந்தபோதும், அதே உற்சாகத்தையும் மரியாதையையும் கொடுத்து வரவேற்று என்னுடைய திரை வாழ்க்கையின் வளர்ச்சியிலும் முன்னேற்றத்திலும் காரணமாக இருந்து வருகிறீர்கள்.

எப்போதும்போல உங்களின் ஒத்துழைப்புக்கும், மரியாதைக்கும் என்றும் நான் நன்றியுள்ளவளாக இருப்பேன்.

இப்போது ‘பேய் மாமா’ படத்தில் நகைச்சுவை பாத்திரத்தில் நான் நடித்திருப்பதைக் கண்டு பல பத்திரிக்கை சொந்தங்கள் என்னை போனில் அழைத்து பாராட்டி தியேட்டரில் சிரித்து மகிழ்ந்த தகவலை பகிர்ந்து கொண்டபோது எனக்கு மிகப் பெரிய மகிழ்ச்சியாக உள்ளது.

முதலில் அந்த கதாபாத்திரத்தில் என்னை நடிக்க அழைத்தபோது எனக்குக் கொஞ்சம் தயக்கமாகத்தான் இருந்தது. “இந்தப் படத்தில் நடிப்பதால் உனக்கு என்ன கௌரவ குறைச்சல் வந்துவிட போகிறது..? எல்லா வகையான பாத்திரத்திலும் நடிக்க வேண்டும். அதுதான் நடிப்பு. இப்படித்தான் நடிப்பேன் என்று ஒரு வட்டத்துக்குள் நம்மை அடைத்துக் கொள்ள கூடாது” என்று என் உள் மனது சொன்னது.

என்னுடைய திரை வாழ்க்கையில் என் மீது நான் வைத்த நம்பிக்கையைவிட, மற்றவர்கள் என் மீது வைத்த நம்பிக்கைகள்தான் என்னை ஒவ்வொரு கட்டத்திலும் மாற்றியிருக்கிறது.

அந்த வரிசையில் இயக்குநர் ஷக்தி சிதம்பரம் என்னை நகைச்சுவை நடிகையாக பார்த்தார். எனக்குள் இருக்கும் அந்த திறமையை மக்களுக்கு அந்த பாத்திரம் மூலம் வெளிப்படுத்த வேண்டும் என்று விரும்பினார்.

இதனாலேயே தைரியமாக மக்களை சிரிக்க வைக்க வேண்டும் என்கிற குறிக்கோளுடன்தான் இந்தப் படத்தில் நடித்தேன். இப்போது நீங்கள் பாராட்டுவதை கண்டு நெகிழ்ந்து போயிருக்கிறேன். என்னால் நகைச்சுவை வேடத்திலும் நடிக்க முடியும் என்கிற நம்பிக்கை உங்கள் வாழ்த்துக்களின் மூலமாகக் கிடைத்திருக்கிறது. இதற்காக உங்கள் அனைவருக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்..” என்று கூறியுள்ளார் நடிகை ரேகா.

- Advertisement -

Read more

Local News