Touring Talkies
100% Cinema

Sunday, May 18, 2025

Touring Talkies

“உன் படத்துல நடிக்க சான்ஸ் கொடுப்பா” – பிரபல இயக்குநரிடம் வாய்ப்பு கேட்ட மனோரமா ஆச்சி..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

மனோரமா ஆச்சியைப் பற்றி இந்தியத் திரையுலகமே அறியும். 1000 படங்களுக்கு மேல் நடித்து சாதனை படைத்தவர். அவர் ஒரு இயக்குநரின் படத்தில் நடித்தே தீர வேண்டும் என்று விரும்பி அவரே அந்த இயக்குநரைத் தேடிச் சென்று வாய்ப்புக் கேட்டார் என்றால் அது ஆச்சரியம்தானே..!!

அந்தப் பாக்கியத்தைப் பெற்ற இயக்குநர் கே.பாக்யராஜ்தான். இதனை கே.பாக்யராஜே சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.

“நான் ஒரு முறை ஏவி.எம். ஸ்டூடியோவுக்குச் சென்றிருந்தேன். அங்கிருந்த நான்காவது ப்ளோருக்குள் போவதற்காக காரை விட்டு இறங்கிச் சென்றபோது பின்னாடியே மனோரமா ஆச்சி என்னை நோக்கி ஓடி வந்தார்.

எனக்கே திகைப்பாகிவிட்டது. நான் அவரருகில் சென்று வணக்கம் வைத்தபோது.. “தம்பி.. வீட்டுக்குக் கிளம்பினேன். நீ வர்றதை பார்த்தேன். அதான் பார்க்கணும்னு வந்தேன்.. நான் இதுவரைக்கும் எந்த இயக்குநர்கிட்டேயும் வாய்ப்பு கேட்டு போனதே இல்லை. ஆனால், இப்போ உன் படங்கள் எல்லாத்தையும் பார்த்தேன். ரொம்ப நல்லாயிருக்குப்பா.. எல்லா இயக்குநர்கள் கூடவும் நடிச்சிட்டேன். உன் டைரக்ஷன்ல நடிக்கணும்னு எனக்கு ஒரே ஆசையா இருக்குப்பா.  உன் படத்துல நடிக்க எனக்கு ஒரு சான்ஸ் கொடுப்பா..” என்றார்.

எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. கூடவே ஆச்சரியமாகவும் இருந்தது. ஆச்சி போய் நம்மிடம் வந்து வாய்ப்பு கேட்பதா என்று திகைப்பும் சேர்ந்து கொண்டது. “கண்டிப்பா கூப்பிடுறேன் ஆச்சி. என்னோட அடுத்தப் படத்துலகூட கண்டிப்பா நீங்க இருக்கீங்க..” என்று சொல்லி அவர்களை அனுப்பி வைத்தேன்.

அதேபோல் நான் அடுத்து இயக்கிய ‘இது நம்ம ஆளு’ படத்தில் என்னுடைய அம்மாவாக அவரை நடிக்க வைத்தேன். அந்தப் படத்தில் நடித்தபோது எனக்குத் திருப்தியாகிறதோ இல்லையோ.. அவருக்குத் திருப்தியானால்தான் அந்தக் காட்சியை முடிக்கவிடுவார் ஆச்சி.

அந்தப் படத்தில், ஷோபனாவின் அம்மாவுடன் அவர் பேசிக் கொண்டே வரும் ஒரு காட்சியைப் படமாக்கினேன். அந்தக் காட்சியில் ஆச்சி செய்ய வேண்டிய ஒரு ஆக்சனை நான் செய்து காட்டினேன். அதேபோல் ஆச்சியும் செய்தார். அது எனக்குத் திருப்தியாக இருந்தது.

ஆனால், ஆச்சிக்கு அது நிறைவில்லாமல் இருக்க.. திரும்பத் திரும்ப ரீடேக் கேட்டு வாங்கி கடைசியாக அவருக்கே திருப்தியாகும் அளவுக்கு நடித்த பின்புதான் “ஓகே” என்று சொன்னார்.. அந்த அளவுக்கு நடிப்பில் டெடிகேஷனை காண்பித்தவர் மனோரமா ஆச்சி..” என்று நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்தார் இயக்குநர் கே.பாக்யராஜ்.

- Advertisement -

Read more

Local News