Touring Talkies
100% Cinema

Wednesday, September 10, 2025

Touring Talkies

“தமிழ்ப் படங்களில் அதிகமாக நடிக்காதது ஏன்..?” – நடிகை ல‌ஷ்மி மஞ்சுவின் பதில்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தென்னிந்திய சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான மோகன் பாபுவின் மகளும் பிரபல தெலுங்கு நடிகை மற்றும் தயாரிப்பாளரான ல‌ஷ்மி மஞ்சு, தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருவதோடு இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழித் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

எந்த வேடமாக இருந்தாலும் அதில் கச்சிதமாக பொருந்தக் கூடிய நடிகைகளில் ல‌ஷ்மி மஞ்சு மிக முக்கியமானவர். அதனால்தான் அவர் பல மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

’மறந்தேன் மன்னித்தேன்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான ல‌ஷ்மி மஞ்சு, அப்படத்தை தொடர்ந்து மணிரத்னத்தின் ‘கடல்’, ராதாமோகன் இயக்கிய ‘காற்றின் மொழி’ ஆகிய படங்களில் முக்கியமான கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தார்.

தற்போது, மோகன்லாலுடன் ‘மான்ஸ்டர்’ என்ற மலையாளப் படத்தில் நடித்து வரும் ல‌ஷ்மி மஞ்சு, தமிழ்ப் படம் ஒன்றிலும் நடித்து வருகிறார். பிக் பாஸ் தர்ஷன் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் படத்தின் மிக முக்கியமான கதாப்பாத்திரத்தில் போலீஸ் வேடத்தில் ல‌ஷ்மி மஞ்சு நடித்து வருகிறார்.

சில தமிழ்ப் படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும், தொடர்ந்து தமிழ்ப் படங்களில் நடிக்காதது ஏன் என்ற கேள்விக்கு சமீபத்தில் பதில் சொல்லியிருக்கிறார் நடிகை லஷ்மி மஞ்சு.

இதற்கு ல‌ஷ்மி மஞ்சு பதில் அளிக்கும்போது, “நான் எப்போதுமே தமிழ்ப் படங்களில் நடிக்க ஆர்வமாகத்தான் இருக்கிறேன். இதுவரையிலும் என்னைத் தேடி வந்த எந்த ஒரு தமிழ்ப் பட  வாய்ப்பையும் நான் நிராகரித்ததில்லை. அதேபோல், இப்படிதான் நடிப்பேன்.. இப்படிப்பட்ட வேடத்தில்தான் நடிப்பேன் என்று நான் சொன்னதும் இல்லை. நல்ல வேடமாக இருந்தால், எந்த வேடமாக இருந்தாலும் நான் நடிக்க ரெடியாகவே இருக்கிறேன்.

தமிழ் சினிமாவைப் பொருத்தவரை, என்னை பலர் அணுகாததற்கு ஒரே ஒரு காரணம்தான் இருக்கிறது. அதாவது, நான் ஒரு பெரிய நடிகரின் மகளாக இருப்பதால்தான் என்னை ஒரு நடிகையாக அணுக யோசிக்கிறார்கள். நான் எப்படி நடந்து கொள்வேனோ, என்னை வைத்து எப்படி படமாக்குவது என்றெல்லாம் யோசிக்கிறார்கள் போலிருக்கிறது.

ஆனால், என்னை பொருத்தவரை நான் நடிகையாக ஒரு படத்தில் கமிட் ஆகிவிட்டால், நடிகையாக மட்டுமே இருப்பேனே தவிர நடிகர் மோகன்பாபுவின் மகளாகவோ அல்லது ஒரு தயாரிப்பாளராகவோ நடந்து கொள்ள மாட்டேன். இதுவரை அப்படித்தான் இருக்கிறேன், இனியும் அப்படித்தான் இருப்பேன்.

நான் பல மொழிகளில் நடித்து வந்தாலும் தமிழ்த் திரைப்படங்கள் மீது எனக்கு எப்போதும் தனி மரியாதை உண்டு. அதனால், தமிழ்ப் படங்களில் நடிக்க நான் ஆர்வமாக இருக்கிறேன். நல்ல கதையாக இருந்தால், எந்த வேடத்திலும் நடிக்க ரெடி. பெரிய படம், சின்ன படம் என்றெல்லாம் பார்க்க மாட்டேன். அதனால் தமிழ் திரையுலகினர் என்னை எந்தவித தயக்கமும் இன்றி தாராளமாக அணுகலாம். நானும் தமிழ்ப் படங்களில், சவாலான வேடங்களில் நடிக்க மிக ஆர்வமாக இருக்கிறேன்..” என்று தெரிவித்துள்ளார்.

- Advertisement -

Read more

Local News