இந்த மாதத் துவக்கத்தில் இருந்து ஹைதராபாத்தில் நடந்து வந்த ‘எனிமி’ படத்தின் படப்பிடிப்பின்போது திடீரென்று 2 நாட்கள் விஷால் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவில்லை.
“அவருக்கு திடீர் உடல் நலக் குறைவு. கடுமையான மைக்ரேன் தலைவலியால் பாதிக்கப்பட்டிருந்தார்” என்றெல்லாம் செய்திகள் வந்தன.
அந்த மைக்ரேன் தலைவலிக்கு ‘அவன் இவன்’ படத்தின்போது பல காட்சிகளில் அவர் ஒன்றரை கண்ணை வைத்து நடித்திருந்ததுதான் காரணம் என்றும் சொல்லப்பட்டது.
ஆனால், இப்போது வேறு சில காரணங்களும் விஷாலின் ‘மைக்ரேன் தலைவலி’ வந்தமைக்குக் காரணங்களாகச் சொல்லப்படுகிறது.
விஷாலுக்கும் அனிஷா ரெட்டி என்பவருக்கும் இடையே திருமண நிச்சயத்தார்த்தம் சென்ற வருடம் நடைபெற்றது. ஆனாலும் தென்னிந்திய நடிகர் சங்கத்தில் கட்டிடம் கட்டி முடித்த பின்பு அந்தக் கட்டிடத்தில்தான் தனது திருமணம் நடைபெறும் என்று விஷால் சபதம் எடுத்திருந்ததால் கட்டிடம் கட்டி முடிக்கும்வரையிலும் திருமண நிகழ்வும் காத்திருந்தது.
இடையில் திடீரென்று மணமகள் வீட்டார் இந்தத் திருமணத்தை முறித்துக் கொண்டதாகவும் செய்திகள் வந்தன. அது உண்மை என்று இப்போது தெரிகிறது. விஷாலுடன் நிச்சயத்தை முறித்துக் கொண்ட அந்தப் பெண்ணுக்கு அடுத்த மாதம் திருமணம் நடைபெறவிருக்கிறதாம்.
இந்தத் தோல்வியும் விஷாலின் திடீர் உடல்நலக் குறைவுக்கு ஒரு காரணம் என்கிறார்கள். கூடவே அந்தப் பெண்ணின் குடும்பத்தாரிடம் விஷால் நிறைய பணம் வாங்கியிருந்ததாகவும், இப்போது அந்தப் பணத்தைத் திருப்பிக் கொடுக்க வேண்டிய கட்டாயம் அவருக்கு வந்திருப்பதால் ஒட்டு மொத்தமாய் அவருக்கு மைக்ரேன் தலைவலி வந்துவிட்டது என்கிறார்கள்.
“விஷால், நிச்சயமாக இது எல்லாவற்றையும் சமாளித்து கரை சேருவார்…” என்று அவரது நண்பர்கள் உறுதியுடன் சொல்கிறார்கள்.