‘அட்டக்கத்தி’ படத்தில் அறிமுகமான நடிகர் விஜய் விஷ்வா அதற்கடுத்து ‘கேரள நாட்டிளம் பெண்களுடனே’, ‘பட்டதாரி’, ‘மாயநதி’, ‘பிளஸ் ஆர் மைனஸ்’, ‘இரயான்’, ‘அந்த ஒரு நாள்’, ‘நாடகம்’ ஆகிய படங்களில் நாயகனாக நடித்திருக்கிறார். தற்போது இவர் நடிக்கவிருக்கும் புதிய திரைப்படம் துவங்கியுள்ளது.
‘ஹாண்ட் ஆப் காட்’ புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ராபின் சாமுவேல் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.
‘தி புக் ஆஃப் ஏனோக்’ என்று பெயர் சூட்டப்பட்டிருக்கும் இந்தப் படத்திற்கு பிரவீன் எஸ்.ஏ இசை அமைக்கிறார். நிரன் சந்தர் ஒளிப்பதிவு செய்கிறார். இயக்குநர் வெயிலோன் இந்தப் படத்தை இயக்குகிறார்.
நோய் தொற்றிலிருந்து மக்கள் தங்களைத் தாங்களே காப்பாற்றிக் கொள்ள மாஸ்க் அணிந்து கொள்வது, சமூக இடைவெளியைப் பயன்படுத்துவது, தனிமைப்படுத்திக் கொள்வது.. என்பதெல்லாம் இன்று மட்டும் நடக்கும் விஷயமல்ல. இன்றிலிருந்து சரியாக 100 ஆண்டுகளுக்கு முன் மனித சமூகம் இதே போன்று ஒரு நோய் தொற்றை சந்தித்தது.
‘இன்ப்ளுயன்சா வைரஸ்’ என்ற அந்தக் கொடிய நோய் கொத்துக் கொத்தாக மனிதர்களை அழித்தது. இதன் விளைவாக மன அழுத்தம் அதிகமாகி மக்கள் இடையே மிகப் பெரிய கிளர்ச்சி ஏற்பட்டு மிகவும் மோசமான கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் உலகம் முழுவதும் நடைபெற்றது.
ஒரு வேளை அதே போன்ற மன நிலை இன்று மக்களுக்கு ஏற்பட்டால் என்னவாகும் என்பதுதான் இந்த ‘தி புக் ஆஃப் ஏனோக்'(The Book of Enoch) படத்தின் கதை.
இந்த படத்தின் பூஜை நிகழ்வு நேற்று சென்னையில் நடைபெற்றது.
சென்னை, திருத்தணி, வேலூர் மற்றும் பெங்களூர் போன்ற இடங்களில் விரைவில் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது.