ஒரு மிகப் பெரிய நடிகர் தான் நடித்த திரைப்படம் தோல்வி என்பதை பகிரங்கமாக ஒத்துக் கொள்வது என்பதெல்லாம் சாதாரண விஷயமல்ல. அவ்வளவு சீக்கிரமாக யாரும் தோல்வியை ஒத்துக் கொள்ள மாட்டார்கள். சில வருடங்கள் கழித்து.. அல்லது அவர்களது நினைவுகளை பத்திரிகைகளில் எழுதும்போதுதான் இது பற்றிக் குறிப்பிடுவார்கள்.
ஆனால், இப்போதுதான் படம் வெளியாகி ஒரு வாரத்திற்குள்ளாகவே படம் சரியாக போகவில்லை ஒத்துக் கொள்கிறேன் என்று ஒரு நடிகர் பகிரங்கமாக சொல்லியிருப்பது நடந்திருக்கிறது. இதனைச் செய்திருப்பவர் நடிகர் மாதவன்.
மாதவன், அனுஷ்கா, அஞ்சலி நடிப்பில் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய நான்கு மொழிகளில் உருவான திரைப்படம் ‘நிசப்தம்’. 35 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட இத்திரைப்படம் கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக ஏற்பட்ட லாக்டவுனில் சிக்கியதால் தியேட்டர்களுக்கு வர முடியவில்லை.
கடைசியாக சென்ற வாரம்தான் அமேஸான் பிரைம் வீடியோ என்னும் ஓ.டி.டி. தளத்தில் வெளியானது. வெளியான முதல் நாளிலிருந்தே அந்தப் படத்திற்கு சரியான வரவேற்பில்லை. காரணம் சரியான கதை, திரைக்கதை இல்லாததுதான். இந்தப் படத்துக்கா இவ்வளவு பில்டப்பு என்பது போல ரசிகர்கள் கருதியதால் படம் அப்படியே அமுங்கிப் போனது.
இந்த எதிர்பாராத தோல்வியை உணர்ந்த படத்தின் நாயகன் மாதவன் தனது ரசிகர்களிடத்தில் இதற்காக மன்னிப்பு கேட்டுள்ளார். இது குறித்து டிவிட்டரில் அவர் வெளியிட்ட செய்தியில் “நிசப்தம்’ படத்தைப் பெரிதாக எதிர்பார்த்தேன். பட்.. சரியாக வரவில்லை.. ஸாரி…” என்று குறிப்பிட்டுள்ளார்.