Rockfort Entertainment சார்பில் T.முருகானந்தம் தயாரிக்க, இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில், அசோக் செல்வன் நடிப்பில், 2022-ம் ஆண்டின் நவீன இளைஞனின் வாழ்வில் நடக்கும் லீலைகளை சொல்லும் ஒரு அருமையான கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள படம் ‘மன்மத லீலை’.
இந்தப் படம் வரும் ஏப்ரல்-1-ம் தேதியன்று உலகமெங்கும் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
இந்த விழாவில் தயாரிப்பாளர் ‘அம்மா கிரியேஷன்ஸ்’ T.சிவா பேசும்போது, “நிச்சயமாக இது ஆபாசமான படமல்ல. இயக்குநர் பாலசந்தர் இருந்து அவர் எடுத்திருந்தால் ‘பாலச்சந்தரின் மன்மத லீலை’ என்று சொல்லக் கூடிய தகுதி கொண்ட படம் இது. குழந்தைகளுடன், குடும்பங்களுடன் பார்க்க தகுதியுள்ள படம்.
‘மாநாடு’ படத்தைவிட அதிகமான டிவிஸ்ட்டுடன் இந்தப் படம் உங்களை ஆச்சரியப்படுத்தும், வெங்கட் பிரபு மிக அட்டகாசமாக இப்படத்தை இயக்கியிருக்கிறார். ‘இந்தக் காலத்தின் ஜெமினி கணேசன்’ அசோக் செல்வன்தான். இந்தப் படம் மிக ஜாலியான படம். படம் மிக பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள்…” என்றார்.

நடிகை ரியா சுமன் பேசும்போது, “என்னுடைய முந்தைய படங்களைவிட இப்படம் மிக, மிக வித்தியாசமான படம். வெங்கட் பிரபுவின் படத்தில் நடிக்க வேண்டும் என்பது என் ஆசை. அவர் எனக்கு இந்த ‘லீலா’ பாத்திரத்தை தந்ததற்கு நன்றி. அசோக் செல்வனுடன் வேலை பார்த்தது மிக ஜாலியாக சந்தோஷமாக இருந்தது. இந்தப் படத்தை நீங்கள் சந்தோஷமாக பார்த்து ரசிக்கலாம்..” என்றார்.
நாயகன் அசோக் செல்வன் பேசும்போது, “காலேஜ் முடிந்த காலத்தில் நண்பர்களுடன் ‘சென்னை-28’ படம் பார்த்தேன். இப்போது, அதே வெங்கட் பிரபு அண்ணாவுடன் வேலை பார்த்தது எனக்குக் கிடைத்த வரம் என்றே சொல்ல வேண்டும்.
கொரோனா நேரத்தில் “பரிசோதனை முயற்சியாக இதை பண்ணலாம்” என்றார் வெங்கட் அண்ணா. நடுவில் எனக்கு கொரோனா எல்லாம் வந்து போனது. அந்த நேரத்தில் எடுத்ததுதான் இந்த முத்தக் காட்சிகள் எல்லாம். ஆனாலும், ஹீரோயின்கள் யாரும் பாதிப்பிற்கு உள்ளாகவில்லை.
பலரும் என்னிடம், “இப்படியொரு படத்தில் ஏன் நடித்தீர்கள்..?” என கேட்டார்கள். இந்தப் படத்தில் எந்தக் கெட்ட விசயமும் இல்லை என எனக்கு தெரிந்தது. என்னை நான் ஒரு நடிகனாக மட்டுமே அடையாளப்படுத்திக் கொள்ள விரும்புகிறேன். இந்தப் படம் மிக, மிக நல்ல படம்…” என்றார்.
இசையமைப்பாளர் பிரேம்ஜி பேசும்போது, “அண்ணன் படத்திற்கு நான் இசையமைத்து படம் ரிலீஸாவது மகிழ்ச்சி. கல்யாணமான அனைவரும் பார்க்க வேண்டிய படம் இது.
2010-லும் 2020-லும் நடக்க கூடிய கதை. படத்தில் பெண்களை உஷார் செய்வது எப்படி என அசோக் சொல்லி தருவார். எல்லோரும் பார்க்கக் கூடிய படம். எங்க அண்ணனுக்கு பயங்கரமான மூளை. அவருடைய ஒவ்வொரு படமும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். இந்த படத்தில் நிறைய க்ளாப்ஸ் கிடைக்கும். படத்தை தியேட்டரில் பார்த்து ரசியுங்கள்…” என்றார்.
இயக்குநர் வெங்கட் பிரபு பேசும்போது, “என்னுடைய உதவியாளர் மணிவண்ணனின் கதைதான் இது. கொரோனா காலத்தில் வித்தியாசமாக ஏதாவது செய்யலாம் என்ற பொது இந்தக் கதை வந்தது, அருமையான கதை.
மணிவண்ணன் பெரிய இடத்திற்கு செல்வார். அசோக்கை கொரோனா நேரத்தில் சந்தித்து இந்தக் கதையைச் சொன்னேன். “உடனே செய்யலாம்..” என்றார். என் உடன் பணிபுரிந்த கலைஞர்களின் உதவியாளர்கள் மூன்று பேருடன் இப்படம் செய்துள்ளேன்.
இந்தப் படம் கில்மா படம் கிடையாது. எனக்கும் பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். நான் அப்படி படம் எடுக்க மாட்டேன். இந்தப் படம் கண்டிப்பாக அனைவரும் இணைந்து ரசிக்கும்படியான படமாக இருக்கும். படம் உங்களுக்கு நிச்சயமாகப் பிடிக்கும்…” என்றார்.